பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தமிழர் வரலாறு

கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பு, "சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணானால் சிறைபிடிக்கப்பட்டுத் தன் கோட்டைக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கப்பட்டபோது, சேரன், இப்பாட்டைப்பாடி, தன் புலவ நண்பர் பொய்கையார்க்கு அனுப்பினான். பொய்கையார் இது கேட்டதும், செங்கணான் புகழ் கூறும் களவழி நாற்பது என்ற பாக்களைப் பாடினார். அது கேட்ட செங்கணான், சேரனை விடுதலை செய்து, அவன் அரியணையையும் திருப்பித் தந்தான்" எனக் கூறுகிறது. (தமிழ்நாவலர் வரலாறு : பாக்கம் : 57) இருகட்டுக்கதைகளும், ஒன்றோடொன்று மாறுபடும் இவ்வுண்மை நிலை, தமிழ்ப் பேராசிரியர்களால், தெய்வத் தன்மை வாய்ந்து, மாற்றொணா மாண்புடையதாகக் கருதப்படும் அம்மரபுவழிச் செய்திகள், வரலாற்று ஆய்வு நிலையில், ஊன்று கோலாகக் கொள்வதற்கு உதவா, எளிதில் ஒடிந்து உருக்குலைந்து போகும் வெறும் நாணற்புல்லாகும் என்பதை உணர்த்துகிறது.

பாக்களின் பொருள், அவற்றோடு இணைந்திருக்கும் கொளுக்களில் கூறப்பட்டிருக்கும் கதைகளோடு, எவ்விதத் தொடர்பும் கொள்ளாத, இவைபோலும் வேறு சில பாடல்களும் உள ; மேலும் ஒரு எடுத்துக் காட்டினை, ஈண்டுத் தருகின்றேன் ; "வரையாது வழங்கும் உள்ளம் உடையாரை உள்ளத்தில் கொண்டு, பழுமரம் தேடிச் செல்லும் பறவை போலக், கடந்து செல்ல வேண்டிய வழி, நெடிது, கொடிது எனக் கருதாமல், கடந்து சென்று, தம் நாவால், தம் வன்மை தோன்றப் பாடிப் பாராட்டி, ஆங்குப் பெற்ற பரிசிலால் தாமும் மகிழ்ந்து, தம் சுற்றத்தையும் பேணிப் பெற்ற பொருளைப் பயன்கொள்ளாதே பேணிக் காப்போம் என எண்ணி விடாது, தாமும் உண்டு, தம்பால் வந்து வறுமை கூறுவார்க்கும் வழங்கித், தம்மைப் பேணிப் புரப்பவர் தரும் பெரும் பரிசில் பொருட்களை இவ்வாறு பயன் கொள்வதில் பெறும் சிறு தொல்லையோடு வாழும், இப்பரிசிலர் வாழ்க்கை, செய்யும் கொடுமையை எப்போதும் அறிந்த