பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தமிழர் வரலாறு


நெடுநல்வர்டையில், அவனுடைய வேப்பர்தார் தவிர்த்து வேறு அடையாளம் காட்டாத நக்கீரர், மேலே கூறிய அகப்பாட்டுச் சில வரிகளில், செழியன் என்ற அவன் பெயர், ஆலங்கானம் என்ற அவன்போரிட்ட களம், சேரன், செம்பியன், திதியன், எழனி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்ற அவன் பகைவர் எழுவர், முரசு கொண்டு, களவேள்வி செய்த அவன் செயல் ஆகிய இத்தனை விளக்கங்களை ஒருசேரத்தந்துள்ளார். என்றாலும், அவன், தன்பாட்டில் தானே கூறிய, அவன் இளையோன் என்ற விளக்கத்தையோ, நனிமிகப் பெரிய படையுடையேம் என்ற செருக்கால் போர் மேற்கொண்டுவந்த பகைவர்தம் அறியாமையினையோ, நக்கீரரின் இப்பாட்டிலும் காண முடியவில்லை.

"ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த வேல்கெழுதானைச் செழியன்" (நற்றி : 387) என்ற பொதும்பில் கிழார் மகனார் பாட்டும், "செழியன் ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த வேல்" (அகம் : 175) என்ற ஆலம்பேரி சாத்தனார் பாட்டும் செழியன் என்ற அவன் இயற்பெயர், ஆலங்கானம் என்ற அவன் வென்றகளம் ஆகிய இவ்விரண்டை மட்டும் உணரத்தான் துணை புரிகின்றனவேயல்லது, அவன் இளையன் என்பதை உணரத் துணை புரியவில்லை.

அதுபோலவே, "தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து மன்னுயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும், நின்னொடு தூக்கிய வென்வேல் செழிய எழுவர் நல்வலம் கடந்தோய்" என்ற (புறம் : 19) வடபுலவியனார் பாட்டும் ! செழியன் என்ற அவன் பெயர், ஆலங்கானம் என்ற போர்க்களம், ஆகிய இவ்விரு விளக்கங்களோடு, அவன் பகைவர் எழுவர் என மேலும் ஒரு விளக்கத்தை மட்டும் தான் தருகின்றதே அல்லது, அவன் இளையன், தாம் படையாலும் எண்ணாலும் பெரியவர் என்ற செருக்கே ஆலங்கானப் போருக்குக் காரணம் ஆயிற்று என்பதை உணர்த்தவில்லை.