பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தமிழர் வரலாறு


இது, அவன் காலத்தில் பாடப்பட்ட பாட்டு அன்று: நெடுஞ்செழியன் காலத்திற்குப் பின்னர், பரணரால், அவருடைய நினைவில் நின்ற நிகழ்ச்சியாகப், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டுவிட்ட ஒரு கணவன், அப் பரத்தையோடு புதுப்புனல் ஆடினான் என்பது குறித்து ஊரில் பலர் கூறும் அலர் உரை, கூடற்பறந்தலைப்போரில் எழுந்த பேரொலியிலும் அதிகமாம் எனக் கூறப்பட்டுளது.

இப்போர், புறநானூற்றுப் பாட்டு ஒன்றில், இன்னமும் தெளிவாக விளக்கப்பட்டுளது: "விண்மீன்கள் ஒளிவீசும் வானத்தில், உலகில் பரந்திருக்கும் இருள் நீங்க, உயர்ந்து செல்லும் ஒழுக்கமாம் தன் இயல்பில் தவறாது, கொடிய வெப்பத்தால், மிக்க அச்சத்தைத் தரும் ஞாயிறு, ஒளி விளங்கும் திங்களோடு நிலவுலகில் வந்துவிட்டாற்போல, பகைகொள்ள எவரும் அஞ்சத்தக்க பேராற்றலோடு இன்னது செய்து முடிக்கேமாயின் இன்னது ஆமேம் என்பது போலும் வஞ்சினம் கூறிப் போரிட வந்த, சேர, சோழராம் இரு பெருவேந்தர்களும், களத்தில் இறந்து போகப் போரிட்டு, வார்கொண்டு வலித்துப் பண்ணப்பட்ட, அப்பகைவரின் போர் முரசையும் கைக்கொண்டு, தன்னைச் சூழ்ந்துகொண்டு போரிடும் பகைவீரர்களின் தகுதியும் திறமும் அறிந்து, அதற்கேற்பப் போரிட்டு அழிக்க, அந்நிலையில், களத்தில் உயிரிழந்தாரின் மனைவியர், கருந்துயர் மிக்குத், தம்மார்பில் அறைந்து கொள்வதால், அறிவும் பிறிதாகி அழுவது ஒயாது கைம்மை நோன்பு மேற்கொண்டு, அதன் அறிகுறியாக, ஆற்று அறல் போல, அடர்ந்து நீண்டு, இளமை அழகு காட்டிடும் கரிய கூந்தலைக் கொய்து கொள்ளும், அக்கொடு நிலையைக் கண்ணுற்ற பின்னரே, தன் போர்த் தொழிலைக் கைவிட்டது, செழிய! நின் கை வேல்!

'மீன் திகழ் விசும்பில், பாயிருள் அகல,
ஈண்டுசெலன் மரபின் தன்இயல் வழாஅது,
உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு,

நிலவுத் திகழ் மதியமொடு நிலம்சேர்ந் தாஅங்கு,