பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

தமிழர் வரலாறு

"நிலம்பெறு திணிதோள் உயர ஒச்சிப்

பிணம்பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடி."
-பதிற்று : 45: 11-12.

துணங்கைக் கூத்து பற்றிய ஏனைய குறிப்புகள், பதிற்று: 18 : 5 ; 52 : 14, 5 : 4 ; மற்றும் 77 : 4 ஆகிய அடிகளில் இடம் பெற்றுள்ளன. பிறிதொரு பழமை வாய்ந்த கூத்தாம் குரவைக் கூத்துப் புகாரில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுளது. "குரவை அயரும் புகார்" (பதிற்று : 73 : 7-9) போர்க்களத்தில் நிகழும் பண்டைத் தமிழ் வெற்றித் திருக்கூத்தும் விளங்கக் கூறப்பட்டுளது : "வெற்றி முரசம் ஓங்கி ஒலிக்க, வாளை உயர ஒச்சி, ஒளிவீசும் பொன் அணிகளை அணிந்து, பொன்னாற் பண்ணப்பட்ட உழிஞைக் கொடிகுடி, போர்க் களத்தில் ஆடும் பேரரசன்."

"வலம்படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங்கொடி உழிஞையன்,

.......போர்க்களத்து ஆடும் கோவே."
-பதிற்று : 56 : 4-8.

இறந்தோர் உடல்கள், அவை, அரசர் உடல்களே ஆயினும், மண்ணுள் புதைக்கப்படும் வழக்கம் தொடர்ந்து நிகழ்ந்து வந்திருப்பது, தமிழ்ப் பழக்க வழக்கங்கள் அழிவுற்றுப் போகாமல் நிலைகொண்டிருந்தமைக்கான பிறிதோர் அகச்சான்றாம். "மன்னர்களை இட்டுப் புதைக்கும் பெருமக்கள் தாழிகளைக் கொண்ட, வன்னிமரங்களால் ஆன மன்றங்களால் பெருமை பெற்ற இடுகாடு"

"மன்னர் மறைத்த தாழி

வன்னி மன்றத்து விளங்கிய காடே."
- பதிற்று : 44 : 22-23.

தம்மைப் புரந்தார் மறைவு குறித்து இரங்கி அழுவார். ஓர் அவையில் கூடியிருந்தாம் போல, அம்மரத்தடியில் அமர்ந்-