பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

தமிழர் வரலாறு


பெரும்பாலும், இவ்வெற்றியின் பயனாய்த் தன் பகையரசர் எழுவரின் முடிகளைக் கவர்ந்து, அவற்றை உருக்கிக் கழுத்தாரமாக ஆக்கிப் புனைந்துகொண்டான் என்பதை அறிவுறுத்தும், "எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து "(பதிற்று : 14:11, 16 : 17) எனும் சிறப்புப் பெயரினைப் பெற்றான். இப்பட்டப்பெயர் அவன் மகனால் வழிவழி மேற் கொள்ளப்பட்டு அவனும் "எழுமுடி மார்பின் எய்தியசேரல்" (பதிற்று : 45 : 6) என அழைக்கப்பட்டான்.

நெடுஞ்சேரலாதன் காலத்தே பாடப்பட்ட பாட்டில், குமட்டுர்க் கண்ணனார், அவருடைய தலைவன், "ஆரியர்கள் நிறைந்த இமயம் வரையான நாடுகளில் உள்ள வட அரசர்களின் ஆற்றல் அழிய வென்றான்" எனப் பொதுப் படையாகவே கூறியுள்ளார் (பதிற்று : 11: 23-25) மழை பொய்யாது பெய்து காத்தலால் வளம் சிறந்து, ஆரியர் வாழும் பொன்வளம் மிக்க பெரிய இமயமலையை ஒக்கும் "மாரி புறந்தர நந்தி, ஆரியர் பொன்படு நெடுவரை புரையும்" (அகம் : 398 : 18-19) என வேறு ஒரு பாடற்பகுதியும் கூறுவதால், இமையமலையை ஆரியரின் வாழிடமாகக் கூறுவது ஒரு மரபு வழித்தொடராகும். ஆனால் நெடுஞ் சேரலாதனின் மகன் குட்டுவன் புகழ்பாடிய பாணர், இக்கதையை மேலும் விரிவுபடுத்திவிட்டார். இச்சேரலாதன், ஆரிய அரசர்கள் அலறுமாறு அவர்களைத் தாக்கிப், பெரும் புகழ் வாய்ந்த, நனிமிகப் பழையதான இமையமலையின் மீது, வளைந்தவில்லாம் தன் இலச்சினையைப் பொறித்துக் கொடிய சினம் மிக்க அப்பகை வேந்தரைச் சிறை செய்தவன். "ஆரியர் அலறத் தாக்கிப், பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்" (அகம் : 396 : 16-18).

குமட்டூர்க் கண்ணனாரின், வடஅரசர்களை "மறந்தபக் கடந்தது" ஒரே தலைமுறையில், "வேந்தரைப் பிணிப்பதாக" வளர்ந்து விட்டது !{{Nop}}