சேர அரசர்கள்
297
இனி, மாமூலனார் மூவேந்தர் வழி வந்தார் எவரையும் பாடவில்லை என்ற அய்யங்காரின் முதல், காரணத்திலாவது உண்மை இருக்கிறதா என்பதை ஆராய்வாம்.
மாமூலனார், தமிழகம் மூவேந்தர் ஆட்சிக் கீழ் முழுமையாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்தாம், அதனால் தான், தமிழகத்துக்கு அப்பாற்பட்ட, வேற்றுமொழி வழங்கும் நாட்டைக் குறிப்பிடும் போது, “தமிழ் கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎம்” (அகம் : 31) எனக்குறிப்பிடமுடிந்தது.
இவ்வாறு பொது வகையால் கூறியதோடு அமையாது. தன் நாட்டு எல்லையை விரிவு படுத்தி, மறைந்த தன் முன்னோர் நினைவாகப் பெருஞ்சோறு அளித்து, கடம்பரை வென்று, இமயத்தே வில் பொறித்து அக்காரணங்களால், பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் என அழைக்கப் பெற்ற சேரர் குலம் பெருவேந்தன் ஒருவனைப் பாராட்டியுள்ளார்.
“நாடுகண் அகற்றிய உதயஞ்சேரல்”
—அகம் : 65.
“துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணிய உதியம் சேரல்,
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை”
—அகம்: 233
“வலப்படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து”
பெருஞ்சோற்று உதியன் சேரலாதனோடு, குடநாட்டைப் வளமிக்க நாடாக்கி ஆண்டு வந்த குட்டுவன் என்ற பிறிதொரு சேரர் குலக் காவலனையும் பாடியுள்ளார்.
குட்டுவன் காப்பப்,
பசிஎன அறியாப் பணைபயில், இருக்கைத்