பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



86

தமிழர் வரலாறு


அய்யங்கார் காட்டும், திரு. பர்சிதர் அவர்களின் மேற் கோளினைக் காண்க.

"Speaking of the argument, from silence pargiter remarks, “one might argue, with more force, that because, the banyan, the most characteristic tree of India, is not mentioned in the Rig. Veda, there were none in India, when the hymns were composed." (History of the Tamils : Page ; 124, Foot Note).

ஆகவே, கண்ணகி வழிபாடு, மகாவம்சத்தில் கூறப்படவில்லை. ஆகவே, கஜபாகுவை வைத்துச் செங்குட்டுவன் காலத்தை முடிவு செய்வது கூடாது என்ற வாதமும் வலுவற்றுப் போவது காண்க. கஜபாகுவை முன்னிறுத்திச், செங்குட்டுவன் காலத்தை உறுதி செய்வது முறையாகாது என்ற தம் வாதத்திற்குத், திரு. அய்யங்கார் அவர்கள், சோழ நாட்டை வெற்றி கொண்ட கஜபாகு, தஞ்சையிலிருந்து, பத்தினித் தெய்வத்தின் காலணியாம் சிலம்பைக் கைப்பற்றிக் கொணர்ந்தான் எனக் கூறும் இலங்கை வரலாற்றுச், சான்றிலிருந்து, பத்தினி வழிபாடு அவன் காலத்தில் எழுந்த ஒன்று அன்று ; அவன் காலத்திற்கு முன்பே வழக்கத்தில் இருந்த ஒன்றாம் என்பது புலப்படுகிறது என்பதையும் ஒரு காரணமாகக் கொண்டுள்ளார்.

கண்ணகிக்குச் செங்குட்டுவன் எடுத்த விழாதான், பத்தினி தெய்வ வழிபாட்டு நெறியின் தொடக்கம் என்று யாரும் கூறவில்லை; யாண்டும் கூறப்படவில்லை. கண்ணகிக்கு முன்னர், பத்தினிப் பெண்டிரே இல்லாமல் இல்லை. சோழ நாட்டில், அதிலும் புகார் நகரில் மட்டும் வாழ்ந்து மறைந்து மாண்புற்ற பத்தினிப் பெண்டிர் எழுவர்க்குக், கண்ணகியே வாயுரை வாழ்த்துக் கூறி வணங்கியுள்ளாள் ; சிலப்பதிகாரம் வஞ்சினக்காதை வரிகளைக் காண்க (5-34)