பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கற்பனை இன்பம்

131


பையன் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தான்: ஒன்றும் புரியவில்லை; மூளை கிறுகிறுத்தது.

பையன் : - போதும், அப்பா! எல்லாம் விளங்கிப் போச்சு. நான் இனிப் பள்ளிக்கூடம் போகவே மாட்டேன். வீட்டிலிருந்து தமிழ்ப் பாட்டுக் கட்டுவேன். ஒழிந்த நேரத்தில் அம்மாவுடன் இருந்து அடுப்பு மூட்டுவேன்.

தந்தை : - அதுதான் சரி. 'சோறு பொங்கித் திண்ணு; சொந்தக்கவி பண்ணு' என்று அந்தகக் கவிராயர் கொச்சையாய்ச் சொல்லுவார். ஆயினும், அது நல்ல வசனம்.

பையன் எழுந்து போனான். பாட்டுப் பாட வேண்டும் என்னும் ஆசை அவனைப் பற்றிக் கொண்டது. ஓசையே பாட்டுக்கு உயிர் என்பது அவன் கருத்து. "சீரும் தளையும் சிறியோர் பார்ப்பர்: மோனையும் எதுகையும் மூடர் விரும்புவர்” என்று சொல்வி, யாப்பிலக்கணத்தின்படி பாட்டெழுதும் பள்ளிப் பிள்ளைகளை அவன் பரிகாசம் செய்வான்.

முதலில் எல்லார்க்கும் படியளக்கும் கடவுளின் மீது பாட்டுக் கட்டுவதே முறையென்று பொன்னப்பனுக்குத் தோன்றியது. வளமாகச் சோறும் கறியும் தரும்படி அவன் சிவபெருமானைப் பாடினான்.

"கற்பனை கடந்தவன். கறிசோறு தருபவன்
வெற்பினில் உறைபவன், வெஞ்சனம் அளிப்பவன்
சற்பத்தை அணிபவன், சாப்பாடும் தருபவன்
நற்பதம் பணிவேன், நான்பசி தணிவேன்"