பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தமிழ் இன்பம்


தந்தையும் கவிராயரிடம் விடைபெற்றுக்கொண்டார். பெற்றோர் இருவரும் போய்ச் சேர்ந்த பின்பு, கவிராயர் கல்யாணம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டுமென்று அவர் உற்றார் உறவினர் சொல்லத் தொடங்கினார்கள். அவர்கள் கல்யாணப் பேச்சை எடுக்கும் பொழுது, 'அந்த இழவு யாருக்கு வேணும்?' என்று கவிராயர் நறுக்கென்று பேசிவிடுவார். ஆகவே, 'கல்யாண இழவை’ப்பற்றி யாரும் அவருடன் பேசுவதில்லை.

நாளடைவில் கவிராயருக்கு, 'நாக பந்த நாயகம்', 'சரமகவிச் சிங்கம்' முதலிய பட்டங்கள் வலிய வந்து சேர்ந்தன. ஆயினும், பெரிய ஆசை ஒன்று அவர் மனத்திலே குடிகொண்டிருந்தது. பதினாயிரம் பாட்டுப் பாடிய கம்பர், கவிச்சக்கரவர்த்திப் பட்டம் பெற்றால், அறுபதினாயிரம் கவி பாடிய பொன்னப்பர் ஏன் அப்பட்டம் பெறக்கூடாது என்பது அவர் கேள்வி. மேலும் அவர் கவிச்சக்கரவர்த்திதான் என்று மனச் சாட்சி உள்ளிருந்து சொல்லிக்கொண்டேயிருந்தது.

கவியரசுப் பட்டம் பெறுவதற்கு மதுரையும் காஞ்சியுமே சரியான இடங்கள் என்று கவிராயர் எண்ணினார்: முதலில் மதுரைக்குத் தம் பரிவாரங்களோடு புறப்பட்டார். அங்கே கோனேரியப்பக் கவிராயர் என்பவர் முத்தமிழ்ப் புலவராக மதிக்கப்பட்டிருந்தார். அவருடைய முழக்கத்தைக் கேட்டு அஞ்சிய மதுரைச் சங்கத்தார் 'கோடையிடிக் கோனேரியப்பர்' என்று அவரை அழைத்தார்கள். அக்கோடையிடியைப் பொன்னப்பக் கவிராயர் காணச் சென்றார்;