பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தமிழ் இன்பம்


தானைத் தலைவர்க்கும் விடை கொடுத்த பின்பு, சிறிது இளைப்பாற எண்ணினான். விழாவிற்காக அணித் திருந்த ஆடை அணிகளையும், உடைவாளையும் களைந்தான்; அரண்மனை ஒடுக்கத்திற் போந்து இளைப்பாறக் கருதி வீர முரசத்திற்குரிய மணி மஞ்ச மாடத்தின் வழியே சென்றான்; அங்கே பழுத்த மேனியும் நரைத்த முடியும் வாய்ந்த பெரியார் ஒருவர் தளர்ந்து கண்வளரக் கண்டான்; அவரது முகத்தின் விளக்கத்தால் அவர் வாக்கில் ஒளியுண்டெனத் துணிந்தான்; அவரனிந்திருந்த பழுதுற்ற உடையினைக் கண்டு பூமகளால் புறக்கணிக்கப்பட்டவர் எனத் தெளிந்தான்;

"இருவே றுலகத் தியற்கை திருவேறு
 தெள்ளிய ராதலும் வேறு”

என்னும் பொருளுரையை நினைந்து பொருமினான்; அருந்தமி ழறிந்த புலவரது மேனி தோய்ந்ததால் வீரமணி மஞ்சம் புனித முற்றதெனக் கருதி மன மகிழ்ந்தான்; அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாவலர்க்குப் பணி செய்யக் கருதி, மஞ்சத்தின் அருகே கிடந்த பெருங் கவரியைத் தன் வலக்கையால் எடுத்து வீசிநின்றான்; செங்கோலும் வெம்படையும் பற்றிப் பழகிய கையினால் சேரமான் பணியாளர்க்குரிய கவரியைப் பற்றிக் குழைத்துக் கவிஞர்க்குப் பணி செய்வானாயினான்.

உறக்கம் தெளிந்த கீரனார் தளர்வு தீர்ந்து கண் விழித்தார்; மெல்லிய மஞ்சத்திலே தாம் படுத்திருப்பதை யும், காவலன் அதனருகே நின்று கவரி வீசுவதையுங் கண்டு உளம் பதைத்தார்; தாம் கண்ட காட்சி கனவோ