பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிவும் திருவும்

159


முத்தமிழ் அறிந்த முத்துசாமி வள்ளல் மகிழ்ந்து அளித்த பரிசுகளைச் சொக்கர் நன்றியுடன் பெற்றுக் கொண்டாரேனும், பொருள் ஒன்றையே அவர் கருதியவரல்லர் வருவாய் மாசம் பத்து வந்தாலும் அதனையே மா சம்பத்தாகக் கொள்ளும் மனப் பண்புடையவர். இரும்பையிழுக்கும் காந்தம்போல், வள்ளலின் இன்சொல், கவிஞரைப் பிணித்தது. அவர் சொல்லில் அமைந்த சுவை, அமுதம் போன்றிருந்தது. அம்மானைப் பாட்டிலே அதைப் புகழ்ந்து பாடியுள்ளார் கவிஞர்.

"காராள மாமரபிற்
கன்னன்முத்துச் சாமியெனும்
சீராளன் வாய்ச்சொற்கள்
தெள்ள முதம்அம்மான!
சீராளன் வாய்ச்சொற்கள்
தெள்ளமுதம் ஆமாயின்
ஆராய்ந்து தேவர்கள் உண்
டாடுவரோ அம்மானை!
அருமைப் புலவர்கள்கொண்
டாடுவா ரம்மானை!"

என்று அல்லும் பகலும் அவ்வள்ளலின் அமுத மொழிகளைப் பருகி மகிழ்ந்த அழகிய சொக்க நாதர் புகழ்ந்து போற்றுகின்றார். "திருப்பாற் கடலில் எழுந்த தெள்ளமுதைத் தேவர்கள் உண்டு ஆடினார்கள். முத்துச்சாமி மன்னன் என்னும் செந்தமிழ்க் கடலினின்றும் எழுகின்ற சொல்லமுதை அருமைப்புலவர்கள் கொண்டாடுகின்றார்கள்" என்று சொக்கர் பாடிய கவி சாலச் செம்மை வாய்ந்ததாகும். விண்ணிலே உறையும் அமரர் விரும்பி உண்ணும் அமுதம் போல், மண்ணிலே