பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30, தெய்வம் படும் பாடு[1]

தெய்வம் படும் பாடு தெய்வத்துக்குத்தான் தெரியும். அடியார் கையில் அகப்பட்டு எத்தனை அடியும் அவதியும்பட்டிருக்கிறது. தெய்வம் எத்தனை ஏச்சும் பேச்சும் கேட்டிருக்கிறது! தொண்டர் என்று பேர் படைத்த மிண்டர்களுள் ஒருவன் தெய்வத்தைக் கல்லால் எறிந்தான்; மற்றொருவன் பிரம்பால் அடித்தான், பித்தன் என்று ஏசினான் இன்னொரு தொண்டன். "தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே"

கும்பகோணத்திற்கு அருகே சத்தி முற்றம் என்ற சிற்றுார் உள்ளது. அங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது. “சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே" என்று பாடினார் திருநாவுக்கரசர். நாளடைவில் சத்தி முற்றம் என்ற பெயர் சத்திமுத்தம் ஆயிற்று. அதிலிருந்து உருவெடுத்தது ஒரு காதற்கதை சத்தியாகிய உமாதேவி ஈசனைக் காதலித்து முத்தமிட்ட இடம் அதுவே என்ற முடிவு கட்டினர் சிவனடியார். அதற்கு அடையாளமாகச் சத்தி சிவனை முத்தமிடும் கோலத்தில் அமைந்த திருவுருவமும் அவ்வாலயத்தில் நிறுவப் பெற்றது. அடியார்மீது வைத்த கருணையால் சத்தியின் முத்தத்தையும் சகித்துக்கொண்டு அந்த ஆலயத்துள் அமர்ந்திருக்கின்றார் ஈசன்.


  1. ஆனந்த விகடன் தீபாவளி மலரில் எழுதியது.