பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தமிழ் இன்பம்


தங்கி இருக்கும் பாசறையாகும். பாண்டிய மன்னன் சேனை தங்கிய் படைவீட்டுக்கு அண்மையில் செப்பறை அமைந்திருத்தலை நோக்கும் பொழுது, அவ்விடம் பாண்டியனார்க்குரிய கோட்டைகளுள் ஒன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது

மதிலுறுப்புகளில் ஞாயில் இன்றியமையாத தொன்றென்பது தமிழ்நாட்டார் கருத்து. படையெடுத்து வரும் பகைவன்மீது மறைந்துநின்று அம்பு எய்வதற்குரிய நிலையங்களே ஞாயில்கள் எனப்படும். மதிலுக்கு ஞாயிலே சிறந்த உறுப்பென்பது புறநானூற்றுப் பாட்டு ஒன்றால் விளங்குகின்றது.

மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்
நீர்இன் மையின் கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே”

என்று ஒரு புலவர் கோட்டையின் நிலையைக் கூறுகின்றார். பாழாய்க் கிடந்த ஒரு பழங்கோட்டையின் தன்மையை இப்பாட்டு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. கோட்டையைச் சூழ்ந்த அகழியில் தண்ணிர் இன்றிப் புல்லும் புதரும் செறிந்திருக்கின்றன. மதில்கள் ஞாயில் இன்றிப் பாழ்பட்டிருக்கின்றன என்பது இப்பாட்டின் கருத்து.

அகழி சூழ்ந்த இடத்தைக் கிடங்கில் என்று கூறுவர். முற்காலத்தில் கிடங்கில் என்னும் கோட்டை, கோடன் என்ற சிற்றரசனுக்கு உரியதாக இருந்தது. பத்துப் பாட்டுள் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படையில் பாராட்டப்படுகின்ற தலைவன் இவனே. இவ்வரசனை நன்னாகனார் பாடிய பாட்டுப் புறநானூற்றிலே தொகுக்கப்பட்டிருக்கின்றது. கிடங்கில் என்னும்