பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருமையில் ஒருமை

209


வதைபுரி குநர்க்கும் உண்டாம்
       மாற்றலா மாற்றல். மாயா
உதவிகொன் றார்க்கும்என் றேனும்
       ஒழிக்கலாம் உபாய முண்டோ?”

என்று நன்றியின் பெருமையை நன்கெடுத்துரைத்தார். முன்னறி தெய்வமாய தாயையும் தந்தையையும், அறியாமையை அகற்றும் ஆசானையும், அறம் திறம்பாத அந்தணரையும், பயன் உவந்தளிக்கும் பசுவையும். பாவம் ஒன்றறியாப் பாலரையும், மெல்லியல் வாய்ந்த மாதரையும் கொலை புரியும் கொடியருக்கும் அற நூல்களில் கழுவாய் உண்டு; ஆனால், செய்ந்நன்றி சிதைத்தோர்க்கும் எஞ்ஞான்றும் உய்யும் வழியில்லை என்று கம்பர் அருளிய பொருளுரை அறிந்து போற்றுதற் குரியதாகும். முந்தித் தவங் கிடந்து, முந்நூறு நாள் சுமந்து, அந்தி பகலாய் இறைவனை வந்தித்துப் பெற்றெடுத்த அன்னையைக் கொன்ற அரும்பாவமும் அகன்று விடலாம். 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று தக்கோர் போற்றும் பெருமை வாய்ந்த பிதாவைக் கொன்ற பிழையும் தீர்ந்து விடலாம். இருமுது குரவர்க்கும் அடுத்த நிலையில் அமைந்து, அஞ்ஞான இருளகற்றும் ஆசிரியரைக் கொன்ற பாவமும் ஒழிந்து விடலாம். மண்ணுலகில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை பூண்டு நெறிமுறையில் ஒழுகும் அந்தணரைக் கொன்ற அரும் பாவமும் நீங்கிவிடலாம். மாநிலத்தில் வாழும் மக்கட்கெல்லாம் அறந்தரு நெஞ்சோடு அருள் சுரந்து அமுதளிக்கும் ஆவைக் கொன்ற பாவமும் அழிந்து விடலாம். இறைநலம் மாறாத இளம் பாலரையும் மெல்லியல் வாய்ந்த