பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தமிழ் இன்பம்


தவமுனிவர் கூட்டுறவும் அவர்இருக்கும் குகையும்
சஞ்சீவி முதலான விஞ்சைமூ லிகையும்
கவனசித்தர் ஆதியரும் மவுனயோ கியரும்
கத்திருக்கும் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே”

என்று பெருமிதமாகப் பாடி முடித்தாள். அப்போது பொதியமலைக் குறவஞ்சியின் மனத்தில் புதியதொரு கிளர்ச்சி பிறந்தது. திருக்குற்றாலக் குறமாதை நோக்கி, "வஞ்சியே! என் மலையின் பெருமையை மறைத்து, உன் மலையின் பெருமையை உயர்த்தி ஓர வஞ்சகமாய்ப் பேசுகின்றாயே! பொதியமலையைப் பாடாத புலவர் உண்டா? அம் மலையின் முடியிலே வெண்மதி தவழும்; மலையெங்கும் மந்த மாருதம் மகிழ்ந்து விளையாடும்; தமிழை வளர்க்கும் தவ முனிவன் அங்கே தங்கி வாழ்கின்றான்; அங்கயற்கண் அம்மையின் அருள் போல் அருவி நீர் பொழியும். இதனினும் சிறந்த மலை இவ் வுலகில் உண்டோ?"

"திங்கள்முடி சூடுமலை
                 தென்றல்விளை யாடும்மலை
தங்கும்முகில் சூழுமலை
                 தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்கண் அம்மைதிரு
                 அருள்சுரந்து பொழிவதென
பொங்கருவி தூங்கும்மலை
                 பொதியமலை என்மலையே?"

என்று பாடினாள். தமிழ் முனிவன் வாழும் மலை என்ற சிறப்பைக் கேட்ட குற்றாலக் குறவஞ்சி சிறிது மனம் மடங்கினாள். ஆயினும் விட்டுக்கொடுக்க மனமின்றிக் குற்றாலப் பழங்களின் செழுமையையும், மலர்களின் சிறப்பையும் எடுத்துரைக்கத் தொடங்கினாள்: