பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37. முப்பெரும் கவிஞர்

நல்லறிஞரது உள்ளத் தடத்தில் ஊற்றெடுத்துப் பொங்கும் ஆர்வத்திற் பிறப்பது இயற் கவிதையாகும். இத்தகைய கவி பாடும் நல்லியற் கவிஞர், உலகில் சிலரேயாவர். அன்னார் இயற்றும் அருங்கவிதையில் மாந்தர் அறிந்து உய்தற்குரிய விழுமிய உண்மைகள் அமைந்து மிளிரும். அவர் மொழிகளில் ஒளியும் இனிமையும் நிரம்பித் ததும்பும். இத்தன்மை வாய்ந்த கவிஞருள் ஒருவராகிய பாரதியார், தமிழ்நாடு செய்த தவப்பயனாகப் பொருநை நாட்டிற் பிறந்தார்; அருந்தமிழ் மொழியுடன் ஆரியமும் ஆங்கிலமும் அளவோடு பயின்று, தம் உள்ளத்திலெழுந்த தள்ளரிய ஆர்வத்தால் இனிய தமிழ்ப்பாட்டிசைத்தார்.

பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் அறிவையும் ஆண்மையையும், வளத்தையும் வாணிபத் திறத்தையும், ஆற்றையும் அருங் காற்றையும் அக் கவிஞர் போற்றிப் புகழ்ந்துள்ளார். சோழநாட்டை வளநாடாக்கிய காவிரியும், தொண்டை நன்னாட்டின் நல்லணியாய்த் திகழும் பாலாறும், புலவர் நாவிற் பொருந்திய வைகையாறும் தமிழ் நாட்டை அழகு செய்யுந் தன்மையை நினைந்து பாரதியார் நெஞ்சம்