பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தமிழ் இன்பம்


சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாது உலகியல் காட்டி, உறுதிப் பொருள் நாட்டிய அக் கவிஞர் நிலமிசை நீடு வாழ்கின்றார். இத் தகைய மதிநலம் வாய்ந்த கவிஞரைத் தன்னகத்தே தோற்றுவித்து வான் புகழ் கொண்ட தமிழ் நாட்டின் பெருமையைப் பாரதியார் வாயார வாழ்த்துகின்றார்.

இன்னும், சேர நாட்டின் செல்வத்தினும், செந்தமிழ்ச் செல்வமே சிறந்ததெனத் தேர்ந்து இளமையிலேயே துறவறம் ஏற்று, தமிழர் குலமணி விளக்காய் விளங்கிய இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரமென்னும் செம்மை சான்ற காவிய அமுதை அள்ளி உண்டு அளப்பரிய இன்பமுற்ற பாரதியார்

" - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு”

என்று நம் தாய்நாட்டைப் புகழ்ந்து மகிழ்ந்தார். கற்போர் மனத்தைக் கவரும் திறம் வாய்ந்த நூல்களுள் சிலப்பதிகாரம் தலைசிறந்ததாகும் என்று பாரதியார் அறிந்துணர்த்தினார். இரும்பினை இழுக்கும் காந்தம் போல் கற்போர் கருத்தினைக் கவருந் திறம் சிலப்பதிகாரத்தில் அமைந்திருத்தலை உணர்ந்த கவிஞர், 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று அச் செஞ்சொற் காவியத்தைப் போற்றினார்; இனிய தமிழ்ப் பனுவலாய் இலங்கும் சிலப்பதிகாரத்தைத் தமிழ்த் தாயின் கழுத்தில் இலங்கும் செம்மணி மாலையாகக் கருதி உள்ளம் தழைத்தார். தமிழ் நாட்டு மூவேந்தர் தகைமையையும், முந் நாட்டின் சீர்மையையும் முத் தமிழின் நீர்மையையும் முறையாக இளங்கோ முனிவர் தொடுத்தமைத்த பாமாலை தமிழ்த்தாயின் திருமார்பின் ஆரமாக அமைந்து அழகுசெய்தற் குரியதன்றோ?