பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

17


முழக்கிக்கொண்டு, இல்லந்தொறும் போந்து இசை பாடுவார். அன்றியும், திருச்சூர்க் கோவிலுக்கு வெளியே நின்று பாணர்கள் பாட்டிசைத்துப் பரிசு பெறும் வழக்கம் இன்றும் உண்டு என்பர்.

இனி, புறநானூற்றிலே பேசப்படுகின்ற வையாவிக்கோப் பெரும்பேகன் என்பவன் ஆவியர் குடியில் பிறந்தவன். ஆவியர் பெருமகன் என்று சிறுபாணாற்றுப் படை அவனைப் போற்றுகின்றது. ஆவியர் குடியிலே தோன்றிய அரசர்களால் ஆளப்பட்டமையால் ஆவிநன்குடி என்பது பழநிக்குப் பெயராயிற்று. நக்கீர தேவர் அருளிய திருமுருகாற்றுப்படையில், திரு ஆவிநன்குடி, முருகனுக்குரிய ஆறு வீடுகளில் ஒன்றாகப் போற்றப்பட்டுள்ளது. வையாபுரி என்பது அதற்கு மற்றொரு பெயர். ஆவியர் குடியில் தோன்றிய 'வையாவிக்கோ'வால் ஆளப்பட்ட நகரம் வையாவிபுரி என்று பெயர் பெற்றுப் பின்பு வையாபுரி ஆயிற்று என்பர்.

ஆவியரைப் போலவே ஒவியர்கள் என்பாரும் பழந்தமிழ் நாட்டில் இருந்தனர். ஒவியர் குடியில் பிறந்து சிறந்து வாழ்ந்த சிற்றரசன் ஒருவனை, ஒய்மான் நல்லியக்கோடன் என்று புறநானூறு குறிக்கின்றது. ஒய்மான் ஆண்ட நாடு ஒய்மானாடு என்று வழங்கலாயிற்று. இந்நாளில் திண்டிவனம் என வழங்கும் ஊர், ஒய்மானாட்டைச் சேர்ந்ததென்று சாசனங்களால் அறிகின்றோம்.

புலவர் வாழ்க்கை

அக் காலத்துப் புலவர்கள் தம்மை மதியாத மன்னர் அளித்த கொடையை அறவே வெறுத்தார்கள்.