பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

45


செய்தியும் அறியத் தக்கதாகும். இன்று இலங்கையில் தமிழர் வாழும் நாடும் நகரமும் யாழ்ப்பாணம் என்னும் அழகிய பெயரைப் பெற்றுள்ளன. யாழ்ப்பாணர் என்பவர் இன்னிசைக் கருவியாகிய யாழைக் கையி வேந்தித் தமிழ்ப் பாட்டிசைக்கும் இசைவாணர். யாழ்ப் பாணர் என்ற குலத்தார் இப்பொழுது தமிழ்நாட்டில் இல்லையென்றாலும், முன்னாளில் அவர் சிறந்து வாழ்ந்தனர் என்பதற்கு ஒரு சான்றாக நிற்பது யாழ்ப் பாணம் என்னும் நன்னகரம்.

பழந்தமிழ்க் குடிகளாகிய பாணரைத் தமிழ் நாட்டுப் பெருநில மன்னரும் குறுநில மன்னரும் ஆதரித்தார்கள்; வரிசை அறிந்து அவர்க்குப் பரிசளித்தார்கள். சோழ நாட்டு மன்னனாகிய கரிகால் வளவனும் தொண்டை நாட்டில் ஆட்சி புரிந்த இளந்திரையனும் குறுநில மன்னனாகிய நல்வியக்கோடனும் இசைவாணர் குலத்தை ஆதரித்த செய்தி பத்துப்பாட்டிலே கூறப்படுகின்றது. சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தில் பெரும் பாணர் குலம் சிறப்புற்று வாழ்ந்ததென்பது சிலப்பதிகாரத்தால் நன்கு அறியப்படுகின்றது. எனவே, முற்காலத்தில் தமிழிசையை இசைத் தொழிலுக்காகப் பயின்றவர் பாணர் குலத்தவரே என்பதும், அவர்களை ஆதரித்த பெருமை தமிழ்நாட்டு மன்னர்க்கு உண்டு என்பதும் பண்டைத் தமிழ் நூல்களால் விளங்குவனவாகும்.

சங்க காலம் என்று சொல்லப்படுகின்ற பழங்கால நூல்களில் வரும் இசைப் பாடல்கள் இயற்கை நலங்களையும் இறைவன் பெருமையையும் அழகுற எடுத்துரைக்கின்றன. பரிபாடல் என்னும் பழைய இலக்கிய நூலில் வைகை ஆற்றைப் புகழ்ந்து பா'