பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

தமிழ் இன்பம்


என்பது திருக்குறள். எனவே, அறிவிலே கோட்டம் உடையவனைக் கோட்டி என்று சொல்வது பாண்டி நாட்டு வழக்கு.

கோட்டியைத் தீர்க்கும் குற்றால அருவியைச் சிறிது பார்ப்போம். மலையினின்று விழும் அருவியைக் காண்பது கண்ணுக்கு இன்பம்; அருவியில் நீராடுவது உடலுக்கு இன்பம். திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றாலத்திலே அருமையான பல அருவிகள் உள்ளன. தேனருவி என்பது ஒர் அருவியின் பெயர். வட அருவி என்பது மற்றோர் அருவி; ஐந்தலை அருவி என்பது இன்னோர் அருவி. அருவியை நினைக்கும் பொழுதே கவிகள் உள்ளத்தில் ஆனந்தம் பிறக்கும்; கவிதை பொங்கும். 'வீங்கு நீர் அருவி வேங்கடம்' என்று திருப்பதியைச் சிறப்பித்துப் பாடினார் சிலப்பதிகார ஆசிரியர். 'பொங்கருவி துங்கும் மலை பொதிய மலை என் மலையே' என்று செம்மாந்து பாடினாள் பொதியமலைக் குறத்தி. 'தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்' என்று பாடினாள் திருக்குற்றாலக் குறவஞ்சி. இத்தகைய பழமையான சொல் இன்றும் திருநெல்வேலியில் வழங்குகின்றது. ஆனால், சென்னை முதலிய இடங்களில் அருவி என்றால் தெரியாது; நீர் வீழ்ச்சி என்றால்தான் தெரியும். நீர் வீழ்ச்சி என்பது Water-fall என்ற ஆங்கிலப் பதத்தின் நேரான மொழி பெயர்ப்புப்போல் காணப்படுகின்றது.

மலையிலே வாழ்கின்ற ஒரு குலத்தாரை மலைப் பளிங்கர் என்பர். வேடர் வகுப்பைச் சேர்ந்தவர் அவர்; மலைநாட்டுப் பழங்குடிகள். பளிங்கன் என்ற