பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவிய இன்பம்

75


"கடலொடு காவிரி சென்றலைக்கும் முன்றில்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்"

என்று கூறினாள் தோழி. இதனால், காவிரிப்பூம்பட்டினத்தில் அந்த நாளிலே காமன் கோயில் இருந்த தென்றும், குலமாதர் அங்குச் சென்று வழிபடும் முறை இருந்ததென்றும் நன்றாக விளங்குகின்றன. இன்றும், தமிழ் நாட்டின் பல பாகங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 'ஈசனுடைய நெற்றிக் கண்ணால் காமன் எரிந்துபோனான்' என்று வாதிப்பாரும், அப்படியில்லை என்று சாதிப்பாரும் இக்காலத்தும் தமிழ் நாட்டிலுண்டு.

காமம் என்ற சொல்லும், காமன் என்ற பெயரும் தமிழ் நூல்களிலே எடுத்தாளப்பட்டாலும் இன்று அவை இழிந்த பதங்களாகவே எண்ணப்படுகின்றன. காமம் என்பது வடசொல்; இன்பம் என்னும் பொருள் அதற்குண்டு. உறுதிப் பொருள்களைத் "தர்மார்த்த காம மோட்சம்” என்று வடமொழியாளர் கூறுவர். இவ்வடமொழித் தொடருக்கு நேரான தமிழ், "அறம் பொருள் இன்பம் வீடு” என்பது. எனவே, காமம் என்பது இன்பம் என்ற பொருளைத் தருகின்றது. திருவள்ளுவர் காலத்தில் காமம் இழிந்த சொல்லாகக் கருதப்படவில்லை என்று தெரிகின்றது. அறம் பொருள் இன்பம் என்ற முப்பாலைப் பற்றி எழுதிய திருவள்ளுவர் இன்பப் பகுதிக்குக் காமத்துப் பால் எனப் பெயரிட்டார் என்றால், அவர் காலத்தில் காமம் இழிந்த சொல்லாகக் கருதப்படவில்லை என்பது தெரிகின்றதல்லவா?