பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12. கண்ணகிக் கூத்து

சிலப்பதிகாரம் என்னும் நாடகக் காவியம் தமிழ் நாட்டு மூவேந்தர்க்கும் உரியதாகும். கதைத் தலைவியாகிய கண்ணகி சோழ நாட்டிலே பிறந்தாள்; பாண்டி நாட்டிலே தன் கற்பின் பெருமையை நிறுவினாள்; பின்பு சேரநாடு போந்து வானகம் எய்தினாள். ஆகவே, நூலாசிரியர், சேர சோழ பாண்டியர்கள் ஆண்டு வந்த முந்நாட்டின் பெருமையையும் முறையாக எடுத்துரைக்கின்றார். இவ்வுண்மை,

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக".

என்று சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகளை நோக்கிக் கூறுமாற்றால் இனிது விளங்கும். இவ்வாறு, முந்நாட்டின் பெருமையையும் எழுதப் போந்த ஆசிரியர் அவற்றின் அரசியல் முறைகளையும், சமய நெறிகளையும், பிறவற்றையும் குறிப்பாகக் கூறியருளினார். ஆகவே, முந்நாட்டின் நீர்மையையும் ஒருங்கே எடுத்துரைக்கும் நூல் தமிழ்மொழியில் சிலப்பதிகாரம் ஒன்றேயாம்.

மூவேந்தர்க்கும் உரிய நூலாக விளங்கும் சிலப்பதிகாரம் முத்தமிழ் நயங்களும் அமைந்த அரிய நூலாகவும் திகழ்கின்றது. இயல், இசை, நாடகம்