பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காவிய இன்பம்

87


காவிரியாறு கடலோடு கலக்குமிடத்தில் வளமும் அழகும் வாய்ந்து விளங்கிற்று அந்நகரம். பட்டினம் என்னும் சொல், சிறப்பு வகையில் காவிரிப்பூம்பட்டினத்தையே குறிப்பதாயிற்று. இக்காலத்தில் பட்டணம் என்பது சென்னப் பட்டணத்தைக் குறிப்பது போன்று அக்காலத்தில் பட்டினம் என்னும் பெயர் காவிரிப்பூம்பட்டினத்திற்கு வழங்கிற்று. அழகு வாய்ந்த அப்பட்டினத்தைக் கவிகள் பூம்புகார் நகரம் என்றும் அழைத்தார்கள். "பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்” என்று பட்டினத்தைப் பாடினார் சிலப்பதிகார ஆசிரியர்.

அந்நகரின் துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நடந்தன. தமிழ் நாட்டாரோடு வாணிகம் செய்து வளம் பெற்ற யவனர் என்ற கிரீக்கர்கள் காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரையில் விண்ணளாவிய மாடங்கள் கட்டிக் குடியிருந்தார்கள். தெய்வமணமும் அந்நகரிலே கமழ்ந்துகொண்டிருந்தது. சிவன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், வாசவன் கோயில் இன்னும் பல கோயில்கள் அங்கு நின்று அணி செய்தன. 'இந்திரன் திருநாள்' கோலாகலமாக இருபத்தெட்டு நாள் கொண்டாடப்பட்டது. இங்ங்னம் காவிரிப்பூம்பட்டினம் பொருள் வளமும் தெய்வ நலமும் பெற்று விளங்கிய காலமே சிலப்பதிகாரக் காலம்.

அக்காலத்தில் சேர நாட்டை ஆண்டவன் ஒரு சிறந்த மன்னன். செங்குட்டுவன் என்பது அவன் பெயர். கற்புத் தெய்வமாகிய கண்ணகி தன் நாட்டில் வந்து