பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தமிழ் இன்பம்


கயவாகு மன்னன்' என்பதை முன்னமே கண்டோம். இலங்கையரசனாகிய கயவாகுவின் காலத்தைத் தெரிந்துகொண்டால் செங்குட்டுவன் காலமும் விளங்கிவிடுமன்றோ? இந்த வகையில் சரித்திர ஆசிரியர்களாகிய கனகசபைப் பிள்ளை முதலிய அறிஞர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். இலங்கையரசர் வரலாற்றைக் கூறும், மகாவம்சம் என்ற நூலில் கஜபாகு என்னும் பெயருடைய மன்னர் இருவர் குறிக்கப்படுகின்றனர். முதல் கஜபாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி[1]யில் அரசாண்டவன். அவன் காலத்துக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு மற்றொரு கஜபாகு அரசு புரிந்தான். இவ்விரண்டு அரசர்களில் முதல் கஜபாகுவே செங்குட்டுவன் காலத்தவன் ஆதல் வேண்டும் என்பது சரித்திர ஆராய்ச்சியாளர் கொள்கை. எனவே, செங்குட்டுவன் அரசாண்ட காலம் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது தெளிவாகின்றது. அதுவே சிலப்பதிகாரத்தின் காலமும் ஆகும்.

இன்னும், இக்கொள்கைக்கு ஆதாரமான செய்திகளிற் சிலவற்றைப் பார்ப்போம்: கரிகாற்சோழன் என்னும் திருமாவளவன் காலத்திற்குப் பின்பு சோழ நாடு உலைவுற்றுச் சீரழிந்தது. பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு சோழன் அரியணை ஏறினான். உறையூர் என்னும் உள்நாட்டுத் தலைநகரில் மற்றொரு சோழன் அரசனாயினான். புகார்ச் சோழனுக்கும் உறையூர்ச் சோழனுக்கும் போர் மூண்டது. அப்போரின் தொல்லை ஒருவாறு தீர்ந்த பின்பு, 'பட்ட காவிலே படும், கெட்ட குடியே கெடும்' என்ற பழமொழிப்படி, சோழ நாட்டிற்கு ஒருபெருந் தீங்கு நேர்ந்தது. குணகடல் கரை புரண்டு எழுந்து காவிரிப் பூம்பட்டினத்தை அழித்தது. இக்கொடும்மை நெடுமுடிக்


  1. கி.பி. 176 - 193