பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

வல்லிக்கண்ணன்


குறித்த பிரக்ஞையின் கணிப்பு சுவாரஸ்யமான சிந்தனையாக அமைந்துள்ளது:

“சென்ற ஓராண்டில் பிரக்ஞை சாதித்தது என்ன என்ற கேள்வி எங்கள் மனத்தில் மட்டுமல்லாமல், சற்று அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் இலக்கிய நண்பர்கள் மனத்திலும் எழுந்திருப்பதைக் காண்கிறோம். இக்கேள்விக்கான முழு பதிலையும் பிரக்ஞையைச் சார்ந்தவர்களே அளித்தல் என்பது அவ்வளவு உசிதமாகத் தோன்றவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். பிரக்ஞை இலக்கிய ரீதியில் ஒன்றையும் சாதிக்கவில்லை என்ற எண்ணம் வாசகர்கள் மனத்தில் இருப்பின், அதற்குப் பிரக்ஞையைச் சார்ந்தவர்கள் மட்டும் பொறுப்பல்ல. தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை இது ஒரு தேக்க காலம்.

சிறு பத்திரிகைகளின் போக்கு குறித்து சற்று மாறுபட்ட எண்ணம் பரவி இருப்பதைக் காண்கிறோம். அது பிரக்ஞையைச் சார்ந்தவர்களின் எண்ணத்துடன் ஒன்றிணைவதாகவும் இருக்கிறது. சுத்த இலக்கியம் மட்டுமே வெளியிடுவதுதான் சிறு பத்திரிகைகளின் லக்ஷணம் என்ற நிலை மாறவேண்டும். நம்மைப் பாதிக்கும் எந்த விஷயத்தைப் பற்றியும் அறிவுபூர்வமாக கலை நோக்குடனும் சமூக நோக்குடனும் பார்க்கப்பட்ட கட்டுரைகள் வெளிவர வேண்டும் என்பது நோக்கமாக இருக்க வேண்டும். வரும் இதழ்களில் பிரக்ஞை இதற்கான முயற்சிகள் செய்யும்.” (இதழ் 13, அக்டோபர் 1975)

இந்த 13 வது இதழ் வேறு வகைகளிலும் குறிப்பிடத்தகுந்ததாக அமைந்துள்ளது. சார்வாகன் எழுதிய 'மக்கள் இலக்கியமும் மனோதர்மமும்' என்ற நல்ல கட்டுரை ஒன்று இதில் வந்திருக்கிறது. நீண்ட சர்ச்சைக்கு வித்திட்ட கட்டுரை ஒன்றை ந. முத்துசாமி எழுதினார் வேற்றுமை என்ற தலைப்பில்

1975 மார்ச் ‘கசடதபற'வில் ஞானக்கூத்தன் சி. மணியின் எழுத்துக்கள் என்றொரு கட்டுரை எழுதி வரும் போகும் என்ற கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் செய்திருந்தார். பதினைந்து ஆண்டுகளாகக் கவிதை எழுதி, புதுக் கவிதைத் துறையில் பெயர் பெற்றுவிட்ட சி. மணியின் எழுத்துக்கள் போலியானவை; உண்மையான கவிதைகள் ஆகமாட்டா என்று ஞானக்கூத்தன் கருத்து தெரிவித்திருந்தார்.

ஞானக்கூத்தனின் ‘கசடதபற’ கட்டுரைக்கு நீண்ட மறுப்பாகவும்