பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

105


நடந்து வரும் விவாதம் இப்படியே இன்னமும் தொடரத்தான் வேண்டுமா?” என்று 'பிரக்ஞை' கேட்டது.

அதன் பிறகம் 'ஞானக்கூத்தனின் பதில்' (ஒரு பகுதி மட்டும்) 'ஒரு தயாரிப்புக் கவிஞர்-பிற்சேர்க்கை; இன்னும் சில எதிரொலிகள்' என்று வெங்கட்சாமிநாதன் எழுதியதையும் ( 8 பக்கங்கள் ) வெளியிட்டது.

1976 பிற்பகுதியிலிருந்து 'பிரக்ஞை' மாதம்தோறும் வெளிவர முடியாத நிலைமை ஏற்பட்டது. 21-22, 23-24 என்று இரண்டு இதழ்களை ஒன்றாகச் சேர்த்துப் பிரகரித்தது.

21-22 வது இதழில் 'கே. சி. எஸ் பணிக்கர்-ஒரு பார்வை’ என்ற கட்டுரையில் ஜெயராமன் அந்த ஓவியரைப் பற்றி விரிவாக எழுதினார். பணிக்கரின் ஓவியங்களும் அச்சாகியிருந்தன.

‘மொழி, கலாச்சாரம் பற்றி பிரக்ஞை தீவிர கவலை கொண்டுள்ளது; பிரக்ஞையின் எல்லை விஸ்தரிப்பில் வரும் விஷயங்களுக்கு முதலிடம் அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்று அறிவிக்கப்பட்டதற்கு ஏற்ப, இலக்கியம் தவிர்த்த இதர விஷயங்களிலும் பிரக்ஞை அக்கறை காட்டலாயிற்று.

‘மறக்கப்பட்ட ஒரு எழுச்சி' என்ற தலைப்பில் ஸந்தால் இன மக்களின் புரட்சி பற்றி பாணி பூஷண் கோஷ் எழுதிய கட்டுரை; மாவோ பற்றிய சிந்தனை, ஒரு ஜெர்மானியத் திரைப்படம் பற்றி அறிமுகம் ஆகியவற்றை பிரக்ஞை வெளியிட்டது.

ஞானபீடம் பரிசு ‘சித்திரப் பாவை' என்ற அகிலன் நாவலுக்கு அரிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்து வீராச்சாமி எழுதினார் (25 வது இதழ்). அதை ஒட்டி, சுந்தர ராமசாமி 'போலி முகங்கள்' என்றொரு கட்டுரை எழுதினார். அது வெளிவந்த இதழ் 26, 27, 28 என்ற எண்களைத் தாங்கிய ஒரே இதழாகும்.

அந்த இதழில் ‘தமிழ் நாடகச் சூழல்-சில பிரச்னைகள்' என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன் அவருடைய இயல்புப்படி 41 பக்கங்கள் எழுதியிருந்தார். ந. பிச்சமூர்த்தி பற்றி கி. அ. சச்சிதானந்தம் எழுதிய கட்டுரையும் பிரசுரமாயிற்று. ந. பி. யின் மரணத்தை ஒட்டி எழுதப்பெற்ற கட்டுரை அது.