பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

வல்லிக்கண்ணன்


1976 நவம்பர், டிசம்பர், 1977 ஜனவரி எனத் தேதியிடப் பெற்ற அந்த இதழுக்குப் பிறகு, பிரக்ஞை 1977 ஜூலை மாதம்தான் வெளி வந்தது. 29-34 என்று ஒரே இதழாக.

அந்த இதழின் தலையங்கம் குறிப்பிடப்பட வேண்டிய சீரிய சிந்தனை ஆகும்.

‘சில மாத இடைவெளிக்குப் பிறகு 'பிரக்ஞை' வெளிவருகிறது. இந்த இடைவெளி ஏற்பட்டதற்குக் காரணங்கள் பொருளாதார ரீதியானவை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 'பிரக்ஞை' வெளி வராதது பற்றி, மற்றுமொரு சிறு பத்திரிகையின் சிறு சிறகுகள் துண்டிக்கப்பட்டது குறித்து வருத்தப்பட்டோர் தொகை மிக மிகக் குறைவு. ஆனால் ஓரளவிற்கு இந்நிலை ஏற்படும் என்று முதலிலேயே நாங்கள் கணித்திருந்தோம். அதனால்தான் பிரக்ஞை பெரும் இலக்குகள் அற்ற, நம்பிக்கையைச் சில காலம் உயிருடன் வைத்திருக்கும் செயலாக மட்டுமே இயக்கம் கொண்டது. உங்களில் பெரும்பாலானோர்: எதிரொலி அற்ற மௌனத்தில் அமுங்கிக் கிடப்பதில் எங்களுக்குச் சிறு அதிர்ச்சி ஏற்பட்டது உண்மை. ஆனால் பெரும் வருத்தம் ஏதுமில்லை.

கருத்துலகில் தன் 'பிராண்ட்' சிந்தனையைத் தவிர வேறெதையும் பார்ப்பதில்லை, ஆதரிப்பதில்லை என்று உங்களில் பெரும்பாலானோர் முடிவு கொண்டிருக்கும் வரை ஆக்கபூர்வமான பெரும் மாற்றங்கள் தமிழில் ஏற்படப் போவதேயில்லை. எந்நாளும் கலைஞன் சமூகத்தின் சுவர்களுக்கு வெளியே புறக்கணிக்கப்பட்ட அடிபட்ட விலங்காகத் தான் உலவுவான். கருத்துலகம் க்ஷீணிப்பதற்குக் காரணம் இதுதான். Consumerism நம்மைப் பீடிக்க நாம் அனுமதித்திருக்கும் வரை, கருத்துலகத்தில் கூட அது செயல்படும் வரை, தமிழிற்கு எல்லை. விஸ்தரிப்பு நேரப்போவதில்லை சடுதியில்.

தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக் கூடிய அடிப்படைப் பொறுப்புணர்ச்சிகூட இல்லாது இருக்கும் சில நூறு பேரான நாம் Mass Media வின் இரும்புச் சுவர்களில் ஒரு சிறு பள்ளம்கூட ஏற்படுத்தும் சக்தியற்ற முடவர்களாகத்தான் திரிவோம், இந்த நிலை நீடிக்கும் வரை.

Academicians, வியாபாரப் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், தேடுமறிவற்ற மாணவர்கள், மந்தையாக்கப்பட்டுவிட்ட மக்கள் என்று