பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

வல்லிக்கண்ணன்


புவியரசு, மு. மேத்தா, அக்கினிபுத்திரன், சக்திக்கனல், ஞானி, சிற்பி, ப. கங்கைகொண்டான், முல்லை ஆதவன், தமிழன்பன், தமிழ்நாடன் முதலியவர்கள் வானம்பாடிக் கவிஞர்கள் என மதிக்கப்பட்டனர். இவர்களுடைய கவிதைகள் வானம்பாடி இதழ்களில் அதிகமாக வந்துள்ளன. மற்றும் மீரா, இன்குலாப், அப்துல் ரகுமான் முதலியோரது கவிதைகளும் பிரசுரம் பெற்றன.

இவர்களது உற்சாகத்தினால் உந்தப்பெற்ற இளைஞர்கள் பலரது படைப்புகளை வானம்பாடி வெளியிட்டிருக்கிறது. பாப்லோ நெருடா, ஆந்திரக் கவிஞர்கள், வேறு சில புரட்சிப் பாடகர்கள் கவிதைகளின் தமிழாக்கமும் வெளிவந்துள்ளது. சில கவிஞர்களின் தொகுப்புகள் பற்றிய விரிவான மதிப்புரைகளையும் வானம்பாடி பிரசுரித்தது.

4-ம் இதழில் வெளிவந்த சிற்பியின் 'சாக்கடைகளும் இன்னும் வற்றிவிடவில்லை', 5-ல் வந்த தமிழன்பனின் 'நயனதாரா’, 7-ல் புவியரசு எழுதிய 'ஏலி ஏலி லாமா சபக்தானி?', ஞானி எழுதிய 'கல்லிகை', 9-ல் வந்த புவியரசின் 'ஒரு கவிஞனின் சிலுவைப்பாடு', சிற்பியின் 'சர்ப்ப யாகம்' ஆகிய நீண்ட கவிதைகள் குறிப்பிடத்தகுந்த படைப்புகள்.

உணர்ச்சி வேகமும் புரட்சி எண்ணங்களும் கலந்த சிறு சிறு கவிதைகள் பலராலும் எழுதப்பட்டன. வானம்பாடிக் கவிஞர்களின் உத்வேகம் தமிழ்நாடு நெடுகிலும் உற்சாகத்தையும் கவிதை எழுதும் துடிப்பையும் பரப்பின. பலப்பல ஊர்களிலும், 'விலையில்லாத' - 'தனிச் சுற்றுக்கு மட்டும்' உரிய-சிற்றேடுகள் 'வானம்பாடி' யை முன்மாதிரியாகக் கொண்டு தோன்றின.

ஒரு 'இயக்க வேகம்' பெற்று வளர்ந்து கொண்டிருந்த 'வானம்பாடி'க்கு அதிக வரவேற்பு இருந்தது போலவே, தீவிரமான எதிர்ப்பும் ஏற்பட்டிருந்தது. புதுக் கவிதையில் சமூக- எதார்த்தப் பார்வைக்கு எதிரிடையான தனி மனித அனுபவ, அக உளைச்சல் வெளிப்பாடுகளை ஆதரித்த ‘கசடதபற’ க் கவிஞர்கள் இந்தப் போக்கைக் கண்டித்தார்கள்; குறை கூறினார்கள்; பரிகசித்தார்கள். வானம்பாடிகள் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் பரவியது.

எனவே, பத்தாவது இதழில் வானம்பாடி ‘முத்திரைகளும் முகத்திரைகளும்' என மூன்று பக்கத் தலையங்கம் எழுதியது.

'பத்தே இதழ்களில் ஒரு சரித்திரம் சிருஷ்டி ஆகியது. அதன்