பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

115



'வானம்பாடி’ யிலிருந்து விலகிச் சென்றவர்கள் 'வேள்வி' என்றொரு இதழை வெளியிட்டார்கள். ஒன்றிரண்டு இதழ்களோடு அதுவும் ஒடுங்கி விட்டது. வெளிச்சங்கள் போன்ற சிறுசிறு கவிதைத் தொகுப்புக்களைத் தயாரித்தார்கள். இதுவும் குறுகிய கால ஆர்வமாகவே செயல்பட்டது.

'வானம்பாடி’ கவிதை இதழை 'சிற்பி' பொள்ளாச்சியிலிருந்து பிரசுரிக்க முற்பட்டார். மலையாளம், தெலுங்கு மற்றும் பிற மொழிக் கவிதைகள் அதில் தமிழாக்கமாக வெளியிடப் பெற்றன. சில இதழ்களே வெளிவந்தன.

1981 ஜனவரியில் 'உலகத் தமிழ் மாநாட்டுச் சிறப்பிதழ்' என்று 'வானம்பாடி' உருவாயிற்று. கவிதை சம்பந்தமான நல்ல கட்டுரைகளும் பல கவிதைகளும் இதில் வெளியாயின.

குறிப்பிடத்தகுந்த இந்த விசேஷத் தயாரிப்புக்குப் பிறகு 'வானம்பாடி' இதழ் எதுவும் வரவில்லை. இது வானம்பாடியின் 20-வது மடல் என்று கணக்கிடப்பட்டிருந்தது.

'வானம்பாடி' அதன் இயக்க காலத்தில், அதைப் பின்பற்றும் பலப் பல சிற்றேடுகளை நாடு நெடுகிலும் தோற்றுவித்தது. குறைந்த காலம் செயல்பட்ட அவை தோன்றிய வேகத்தில் மறைந்தும் போயின.