பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

வல்லிக்கண்ணன்



தனிநபர் நிர்வகிக்கிற சிறு பத்திரிகையில் சௌகரியங்களும் உண்டு; அசௌகரியங்களும் உண்டு. பத்திரிகை நடத்துகிறவர் விசால நோக்கும், பிறரது கருத்துக்களை மதிக்கும் இயல்பும், திறமையாளர்களின் நட்பையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து பெறக்கூடிய சாதுரியமும், தனது எண்ணங்களையும் (கலை, இலக்கிய, அரசியல் மற்றும் பல்வேறு) கொள்கைகளையும் மட்டுமே வலியுறுத்திக் கொண்டிருக்கிற வறட்டுப் பிடிவாதம் இல்லாத சுபாவமும் பெற்றிருந்தால், அவருடைய பத்திரிகை பலரது ஒத்துழைப்பையும் பெறுவது சாத்தியமாகிறது. நன்மைகள் புரியவும் முடிகிறது.

அப்படி இல்லாது போனால்-ஆசிரியர் குறுகிய நோக்குடனேயே விஷயங்களைக் கவனிப்பவராக இருந்தால், பிறரது கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்காமலும், மற்றவர்களது திறமையை ஏற்றுக் கொள்ளாமலும் தனது நோக்கும் கொள்கைகளுமே சரியானவை (இலக்கியத்தை வளம் செய்யக் கூடியவை ) என்ற நம்பிக்கையோடு செயல் புரிபவராக இருந்தால், ஆரம்பத்தில் பத்திரிகைக்குக் கிடைத்த அன்பர்களையும் ஆதரவாளர்களையும் அந்தப் பத்திரிகை இழந்து விடுகிறது. அந்தப் பத்திரிகை ஆசிரியரின் நண்பர்களே விரோதிகளாகவும் பரிகசிப்பவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.

ஒரு சிறு பத்திரிகையின் அன்பர்களும் ஒத்துழைப்பாளர்களும் அந்தப் பத்திரிகையின் போக்கில் அதிருப்தி கொள்கிறபோது தனிக் குழுவாய்ப் பிரிந்து தனியாக ஒரு சிறு பத்திரிகை தொடங்குவதும், பின்னர் அந்தக் குழுவிலிருந்து விலகிச் சிலபேர் வேறு சிலரோடு கூடி இன்னொரு பத்திரிகை ஆரம்பிப்பதும் சிறு பத்திரிகை வரலாற்றில் சகஜ நிகழ்ச்சிகள், இத்தகைய பத்திரிகைகளின் ஆயுசு ஒன்றிரண்டு இதழ்கள் அல்லது ஒரு வருடம், இரண்டு வருடம் என்றே அமைகிறது.

தனித் தனி கோஷ்டிக்கு என்றும், ஊருக்கு ஊர் என்றும், அவ்வப் போது சிறு பத்திரிகைகள் தமிழ்நாட்டில் நிறையவே தோன்றின. வந்த வேகத்தில் மறைந்தும் போயின.

அவற்றில் பல எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடவில்லை. எழுத முயன்ற சில இளைஞர்கள்- நாங்களும் எழுத்தாளர்கள் என்று நிரூபிக்க ஆசைப்பட்ட சில ஆரம்ப சூரர்கள்-தங்கள் மன அரிப்பைச் சொறிந்து கொள்ள ஏற்பட்ட தற்காலிக சாதனங்களாகவே அவை முடிந்துள்ளன.

போட்டி உணர்ச்சியாலும், பொறாமை காரணமாகவும், தாக்கவேண்டும் என்ற துடிப்பினாலும், நம்மாலும் சில சாதனைகள் புரியமுடியும் என்ற கம்பீர ஜன்னியின் விளைவாகவும், அவனும் இவனும்