பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

125


சம்பத்தின் நாவல் 'சாவு' என்கிற பிரச்னையை மையமாகக் கொண்டது. அறிவுஜீவி ஒருவன் சாவின் உண்மைத் தன்மையைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள முயல்கிறான். அவனுடைய எண்ண ஓட்டங்கள், மனக் குழப்பங்கள், அவனைப் பற்றி மற்றவர்கள் கொள்ளும் அபிப்பிராயங்கள், சாவு பற்றி பலரக மனிதர்களின் கருத்துக்களை அறிய அவன் செய்யும் முயற்சிகள், 'சாவு'டன் சம்பாஷிப்பதாகக் கூறும் அவனுடைய பேச்சுக்கள். அவன் கொள்கிற முடிவு இவற்றையெல்லாம் இந்த நாவல் சித்திரிக்கிறது. நல்ல படைப்பு.

கலாப்ரியாவின் 'சுயம்வரம்' தனிரகமானது. “ஒரு கவிதையோட பொருளுக்குப் பரிமாணம் இருப்பதாய் உணர்கிறேன். இதைத் தடவிப் பார்க்கிற பரிமாணமெனச் சொல்லவில்லை. அனுபவபூர்வமான வெளிப்பாடு இந்த பரிமாணத்தின் மூலம் வியாபிக்கும். பரிமாணப் பிரக்ஞை ஒரு சுவாரஸ்யமான விஷயம். . (இந்தத் தொகுப்பில் நான் முழுக்க முழுக்க பரிமாணப் பிரக்ஞையோடு சோதனை செய்திருக்கிறதாய் நம்புகிறேன்). இந்தக் கவிதைகள் முழுக்க என் பரிமானப் பிரக்ஞையைப் பாதித்த விஷயங்கள். இவைகள் கவனிக்கப்பட வேண்டுமென்ற ஆர்வம்கூட சாதாரண ஆர்வமாய்த் தோணல. இவைகளுக்கு விளைவு இருக்க வேண்டுமென்று வெட்கமில்லாமல் விரும்புகிறேன்” என்று கலாப்ரியா கூறியிருக்கிறார்.

("சுயம்வரம் கவிதைகள் வெளிவந்து பல வருடங்கள் ஆகியும், அவை கவனிக்கப்படவேயில்லையே. சரியானபடி கவனிப்பைப் பெற வில்லை” என்று கலாப்ரியா மனக்குறையோடு என்னிடம் 1982-ல் குறிப்பிடடது நினைவில் நிற்கிறது.)

இந்த இதழில் அச்சாகியுள்ள ஓவியங்களை வரைந்த ஏ. நாகராஜன் பற்றி 'கலைஞனின் குழப்பங்கள்' என்று வண்ணநிலவன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

'வானம்பாடி’ குழுவினர் பிரசுரித்த வெளிச்சங்கள் கவிதைத் தொகுப்பு பற்றிய வெங்கட்சாமிநாதன் விமர்சனம் (2 பக்கங்கள்) ஒன்றும் வந்துள்ளது.

மற்றும், நாரனோ ஜெயராமன், ஷண்முக சுப்பையா, காஸ்யபன், உமாபதி எழுதிய கவிதைகளும் உண்டு.