பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

129


பார்வை என்ற பகுதியில் புத்தகங்களுக்கு விரிவான மதிப்புரை இடம்பெற்றது.

மீரா 'அந்தப் பக்கம் இந்தப் பக்கம்' பகுதியில் சுவாரஸ்யமாகவும் கிண்டலாகவும் பொது விஷயங்கள் பற்றி அபிப்பிராயங்கள் எழுதினார்.

இவை வழக்கமான அம்சங்களாயின.

இவ்வாறு 'இலக்கிய வெளியில் புதிய சுவடு' பதிக்க முன் வந்த சிறு பத்திரிகையின் ஒவ்வொரு இதழும் இலக்கியத் தரமானதாக அமைந்து, சுவடு நல்ல பத்திரிகை என்ற எண்ணத்தை உறுதிப்படுத்தியது.

வண்ணதாசன், பூமணி, நா. விச்வநாதன் ஆகியோரின் நல்ல கதைகள், புவியரசு, ப. கங்கைகொண்டான், துரை சீனிச்சாமி, விச்வநாதன், கிவி மற்றும் புதியவர்கள் பலரது கவிதைகள்; அபூர்வமாகச் சில மொழிபெயர்ப்புக் கவிதைகள் 'அபத்தவாத நாடகங்கள்' பற்றிய நீண்ட கட்டுரை சுவடு இதழ்களில் வந்துள்ளன.

விசேஷமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு சாதனையைச் சுவடு தனது நாலாவது இதழில் நிகழ்த்தியது. விமர்சகர்கள் பற்றிய விமர்சன இதழ் வெளியிட்டதுதான் அது.

“படைப்புகளை விமர்சிப்பவன் கலை இலக்கிய ஆக்க வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்படுகிறபோது அவனும் ஒரு படைப்பாளியாக உயர்வடைவதைப் பார்க்கிறோம். படைப்பாளியின் அங்கீகரிப்பிற்கு உதவும் அதே நேரத்தில் சில விமர்சகர்கள் படைப்பாளியின் மீது ஆதிக்கம் செலுத்தும் போக்கையும் காண்கிறோம். இந்தச் சூழலில் நம் சமகால விமர்சகர்களின் ஆக்க ரீதியான சாதனைகளை ஒரு மதிப்பீட்டிற்கு உள்ளாக்குவது நல்லது என்ற எண்ணத்தில் இந்த விமர்சகர் இதழை சுவடு வெளியிட முன்வந்துள்ளது. இதில் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள விமர்சகர்களின் பங்கு பற்றித் தெரிவிக்கப்படும் அபிப்பிராயங்கள் முடிவானவை அல்ல என்பதைச் சுவடு அறிந்திருக்கிறது.

இது பொது மேடை ஆரோக்கியமான, ஆக்க ரீதியான கலை இலக்கியச் சிந்தனைகள் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் சுவடு தீண்டாமை பாராட்டாது.”

இந்த விமர்சனச் சிறப்பிதழில் வெளியான கட்டுரைகள்-