பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

வல்லிக்கண்ணன்


1. நம்பிக்கையூட்டும் தமிழ் விமர்சகர்கள்-வல்லிக்கண்ணன் எழுதியது. தமிழில் இலக்கிய விமர்சனம் ஆரோக்கியமாக வளரவில்லை-வளர்க்கப்படவில்லை என்ற குறையை எடுத்துச் சொன்ன கட்டுரை விமர்சகர்கள் பலரது போக்குகள் குறித்தும் அபிப்பிராயம் தெரிவித்தது. முடிவாக, 'வளர்ச்சி பெற்றுள்ள- புதிதாகத் தோன்றி வளர்ந்து வருகிற-திறமையுள்ள படைப்பாளிகள் குறித்தும் அவர்களுடைய படைப்புகள் குறித்தும் அவர்களுக்கும் வாசகர்களுக்கும் சரியானபடி எடுத்துச் சொல்லக்கூடிய இலக்கிய விமர்சகர் இன்று தேவை' என்று அறிவித்தது.

இத்தேவை இன்று வரையிலும் பூர்த்தி செய்யப்படவேயில்லை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய உண்மையாகும்.

2. சு. நா. சுவின் விமர்சன முகம்-சுந்தர ராமசாமி. 3. ரகுநாதன்-தமிழவன். 4. வெங்கட்சாமிநாதன்-வண்ண நிலவன். 5 நா. வானமாமலை-தி. க. சி.

சி. சு. செல்லப்பா பற்றி கனகசபாபதியும், க. கைலாசபதி குறித்து தி. சு. நடராசனும் எழுதித்தர ஒப்புக்கொண்ட கட்டுரைகள் வந்து சேராததால், அவை சிறப்பிதழில் பிரசுரம் பெறவில்லை.

பின்னர் அனைத்துக் கட்டுரைகளும் 'தமிழ் விமர்சனப் பார்வை’ என்ற புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டன.

இந்தச் சிறப்பிதழ் 1973 அக்டோபரில் வெளிவந்தது.

ஏப்ரல் மாதம், மாத இதழாகத் திட்டமிடப்பட்டுத் தோன்றிய 'சுவடு' வின் 5-வது இதழ் டிசம்பர் மாதம்தான் வெளிவர முடிந்தது. அந்த இதழ் தனிச் சிறப்பு உடையது.

படைப்பாளி 'லா.ச.ராமாமிருதத்தின் தத்துவத் தேடல்கள்' என்ற பேட்டிக் கட்டுரை அதில் வந்தது. அவருடைய இலக்கிய அனுபவங்கள், உள்முகத் தேடல்கள், அபிப்பிராயங்கள் ஆழமாகவும் அழகாகவும் அதில் வெளிப்பட்டிருந்தன. அவரிடம் அதற்கான முறையில் கேள்விகள் கேட்டவர் கவிஞர் அபி.

அத்துடன் 'மூன்று பல்கேரியப் படங்கள்' பற்றி எஸ். ஏ. ராம் விரிவான கட்டுரை எழுதியிருந்தார்.