பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

வல்லிக்கண்ணன்


வாழ்க்கையின் குணம் மாற வேண்டும் என்று சூத்திரம் போல் ஒரு சிறு பத்திரிகையின் இலட்சியத்தைச் சொல்லிவிடலாம். ஆனால் அதற்கான வழிமுறைகள் மிகவும் சோதனை தருவதாகவும் நம்பிக்கையிழக்கச் செய்வதாகவும் இருக்கின்றன. கூட்டான பொறுப்பாக இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிளவுகள் தோன்றி சிறுசிறு வட்டங்களாகக் குறுகிப் போய் கவனம் சிதறி வேகம் திசை மாறி விடுகிறது. இவை மனிதர்கள் சம்பந்தப்பட்ட முயற்சிகள் என்பதால், மனிதர்கள் சரித்திரத்தின் ஒரு கட்டத்தில் வாழ்கிறவர்கள் என்பதால் இன்றைய அறிவுலக இயக்கத்தில் இக்குறை தீராமலிருக்கிறது.

திறந்த மனம் கொண்ட விசாரணைகளும், சுய பரிசீலனைகளும் சிறு பத்திரிகைகளின் பிரயத்தனத்தை வீணாக்காமல் காக்கும்.

சிறு பத்திரிகைகளின் வாசகர்களுக்கு ஒரு பொறுப்பிருக்கிறது. வியாபாரப் பத்திரிகைகளின் அரக்கத் தாக்குதலுக்கு ஒரு மாற்றாகவே சில வாசகர்கள் சிறு பத்திரிகைகளில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். சிறு பத்திரிகைகளின் பலவீனமான அளவிலும் எண்ணிக்கையிலும் ) எதிர்ப்பு பரவலானால் மொத்த சமூகத்தின் மனோபாவம் மாறி வியாபாரப் பத்திரிகைகளின் மீது ஒரு கட்டுப்பாடு தோன்றலாம். இவ்வாறு பத்திரிகை, சினிமா, கதைகள் போன்ற சீரழிக்கின்ற சாதனங்களின் பிடியிலிருந்து தப்பினாலே பிற புத்தி பூர்வமான காரியங்களில் மனித சக்தி ஈடுபடுவதற்கான சூழ்நிலை உருவாகும்.

எனவே, வாசகர்களும் சிறு பத்திரிகைகளின் மாற்று முயற்சிகளுக்குத் துணை நிற்க முடியும்- இவற்றைப் பரவலாக்குவதன் மூலம், பலருக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம்" ( வைகை-11)

நேர்மையான சிந்தனைதான். நியாயமான கோரிக்கைதான். ஆனாலும் நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமாவதற்கு வெகுகாலம் பிடிக்கும். அதற்குள் பணபலமும் வேக இயந்திரங்களின் துணையும் பெற்றிருக்கிற வணிக நோக்குப் பத்திரிகைக்காரர்கள் மிக வேகமாக முன்னேறி விடுகிறார்கள். மக்கள் உள்ளத்தையும் வாசகர்களின் ரசனையையும், அதன் மூலம் சமூகத்தின் நிலைமைகளையும் பாழ்படுத்தி, வெற்றிகரமாகத் தங்கள் நாசவேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதுதான் நடந்து வருகிறது.

சமூகச் சீர்கேடுகள், பண்பாட்டுச் சிதைவு, வாழ்க்கை முறைகளில்