பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

வல்லிக்கண்ணன்


தலையங்கமே 'உரைகல்' என்கிற பெயரைப் பெறுகிறது என்று நா.கா. விளக்கமும் கொடுத்தார்.

‘எங்கள் பெயர் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக நாங்கள் எழுதுவதில்லை. தமிழின் பெயர் உலக இலக்கியத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் எழுதுகிறோம். என்ற வரிகள் ஒவ்வொரு இதழ் தலையங்கத்தின் ஆரம்பத்திலும் அச்சிடப்பட்டன ( சோதனை-இரண்டு இதழ்கள்தான் வந்தது ).

புதுமைப்பித்தன் கனவு கண்ட இலக்கிய இதழ் உங்கள் கைகளில் இப்போது தவழ்கிறது. இன்றுதான் எனது நீண்ட நாள் கனவு நிறை வேறியிருக்கிறது. நான் ஒரு நல்ல ரசிகன் என்கிற அடிப்படையில் நானே பத்திரிகாசிரியனாக மாறி தமிழ் இலக்கியத்தைப் புனருத்தாரணம் செய்ய வேண்டுமெனப் பலமுறை எண்ணியிருக்கிறேன் என்று தொடங்கி சுய புராணம் தீட்டியிருந்தார் அவர்.

இரண்டாவது இதழ் மே மாதம் வந்தது. மூன்றாவது இதழ் வரவேயில்லை.

வெளிவந்த இரண்டு இதழ்களும் தரமான தயாரிப்புகளாக விளங்கின. காமராசன் நிறையவே எழுதியிருந்தார். நல்ல கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இலக்கிய சம்பந்தமான கேள்வி-பதில் பகுதி எல்லாம் இருந்தன.

நாடகத்துக்கும் 'சோதனை' முக்கிய கவனிப்பு அளிக்க முன் வந்தது. அழகான அட்டையுடன், ‘சோதனை' நல்ல தோற்றமும் அச்சு அமைப்பும் கொண்டிருந்தது. 'ஆனந்த விகடன்' அளவில் 80 பக்கங்கள். விலை ஒரு ரூபாய். சென்னையிலிருந்து பிரசுரமாயிற்று.

தஞ்சாவூர் பிரகாஷ் நல்ல இலக்கிய ரசிகர். எழுத்தாளரும்கூட உலக இலக்கியங்களையும், இந்திய மொழிகளின் தரமான படைப்புகளையும் ரசித்து மகிழ்ந்தவர். தமிழிலும் நல்ல நல்ல நூல்களைப் பிரசுரிக்க வேண்டும் தரமான இலக்கியப் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆசை உடையவர். அவ்வப்போது முயற்சிகளிலும் ஈடுபடுவார்.

அவர் 1977-ல் 'பாலம்' என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். 'ஸ்கூல் அட்லாஸ்' அளவில் பெரிய வடிவம் கொண்ட பத்திரிகை. படங்கள் வேறு. அட்டை தனி 56 பக்கங்கள். விலை ரூ. 2. இரண்டு இதழ்கள் தான் பிரசுரிக்க முடிந்தது அவரால்.