பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

147


அது வெளியிட்டிருக்கிறது. மற்றும் கதைகள், கவிதைகள், புத்தக விமர்சனக் கட்டுரைகள் உண்டு.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாக, 4 இதழ்கள் வந்தன.

‘பிரபஞ்சம்'- 'இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் குறித்த கலைஞானம் யாவும் கவனத்தில் கொண்டு, சேலத்திலிருந்து வெளியாயிற்று. ஆசிரியர் : சண்பகராமன். ஆசிரியர் குழு-மு. கி. இளங்கோ, பிரதாபன், வை. கதிர்வேலு.

கவிதையில் சோதனை முயற்சிகளில் கவனம் செலுத்தியது. அப்துல் ரகுமான், தமிழ்நாடன் படைப்புகளை அதிகம் வெளியிட்டது. 2 இதழ்கள் தான் பிரசுரமாயிற்று, 1979- ல்.


‘சாதனா'-கவிஞர் கங்கைகொண்டான் சென்னையிலிருந்து பிரசுரித்தார். கி. ராஜநாராயணன் தொகுத்த கரிசல் அகராதியையை அது வெளியிட்டது. நாடகம், சினிமா, ஓவியம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியது. சினிமா பற்றிய சிறப்பிதழாக 4-வது இதழைக் கொண்டு வர ஆசைப்பட்டது. அது கனவாகவே நின்றுவிட்டது.

'வெளிச்சம்' என்றொரு நல்ல முயற்சி, புதுமையான விஷயங்களைக் கொண்டது.

“இலக்கியமும் கலைகளும் இங்கே இருண்டு போயுள்ளன என்று குறையும் கோபமும் கொண்டுள்ள இளைஞர் சிலரின் கூட்டு முயற்சி தான் இந்த வெளிச்சம்.

நமது பண்பாட்டில் கவிந்திருக்கும் இருட்டை, இந்த ஒரு சின்னஞ் சிறிய அகல் விளக்கின் ஒளியினால் ஒழித்துவிட முடியும் என்று நாங்கள் மனப்பால் குடிக்கவில்லை. மாறாக, எல்லோரையும் போல இருட்டில் எங்களால் முணுமுணுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதாலேயே இந்த வெளிச்சத்தை வெளியிட்டிருக்கிறோம்.

தன்னலத்தைத் தவிர வேறெதைப் பற்றியும் சிந்திக்க இயலாத ‘சிந்தனையாளர்' களின் கையில் நமது இலக்கியம், இசை, நாடகங்கள், திரைப்படம், ஓவியம் ஆகிய எல்லாக் கலைகளும் ஒப்புவிக்கப்பட்டுள்ளன என்பது எங்கள் குற்றச்சாட்டு.