பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



28. சிகரம்


முற்போக்கு இலக்கியப் பத்திரிகையான 'தாமரை' இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (CP. வலதுசாரி கம்யூனிஸ்டுகள்) சார்பில் நடைபெறும் மாதப் பத்திரிகை.

இடதுசாரிக் கம்யூனிஸ்டுகள் ( CPM-மார்க்சிஸ்ட் கட்சி) சார்பில் நடக்கிற மாதப் பத்திரிகை 'செம்மலர்' ஆகும். மதுரையிலிருந்து பிரசுரமாகும் இந்த முற்போக்கு இலக்கிய இதழும் புத்தக வடிவத்தில்தான் வருகிறது. மார்க்சிஸ்ட் தத்துவ நோக்கில் தீவிரவாதக் கருத்துக்களை வலியுறுத்தும் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன.

‘நல்ல நாவல்' என்று இலக்கிய ரசிகர்களின் மதிப்புரையைப் பெற்றுள்ள சின்னப்பப் பாரதியின் 'தாகம்' செம்மலரில் தொடர் கதையாக வெளிவந்ததுதான்.

'மலரும் சருகும்', 'தேநீர்' ஆகிய முற்போக்கு நாவல்களை எழுதிய டி. செல்வராஜ் இந்தப் பத்திரிகையில் 'மூலதனம்' என்ற நாவலைத் தொடர்ந்து எழுதினார்.

‘இலக்கியச் சிந்தனை' அமைப்பின் பரிசுகளைப் பெற்ற அநேக சிறுகதைகள் 'செம்மலரி'ல் வந்திருக்கின்றன.

'செம்மலர்' இப்பவும் இடதுசாரிகளின் இலக்கியப் பத்திரிகையாக நடந்து கொண்டிருக்கிறது.

இடதுசாரிகளின் இன்னொரு இலக்கியப் பத்திரிகையாக, ச. செந்தில்நாதன் 'சிகரம்' என்ற மாத இதழை நடத்தினார்.

இந்த 'மக்கள் இலக்கிய மாத இதழ்' 1975 ஜூலையில் பிறந்தது.

‘காலகட்டத்தின் கட்டளையை ஏந்தி, கலை இலக்கியப் பண்பாட்டுத் துறையில் தோகை விரிக்கிறது ஒரு மயில்; கீதம் இசைக்கிறது ஒரு குயில்.’

இப்படி இசைத்துக்கொண்டு ஒரு வாசல் திறப்புக்கு வழி வகுத்தது சிகரம்.