பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

163


‘இது ஒகோ என்றிருக்க வேண்டும் என்ற பேராசை எனக்குக் கிடையாது. இருக்கும் என்று எதிர்பார்க்கும் நப்பாசையும் கிடையாது.

ஏனென்றால் இது போர்க்களத்தில் பீரங்கி அல்ல, பீரங்கியின் ஒரு உறுப்பே.

களத்தில் துப்பாக்கியை ஏந்தி நிற்பவனுக்குக் கரத்தில் வலிமை மட்டும் இருந்தால் போதுமா? போதாது. புத்தி கூர்மை வேண்டும்; சாதுர்யம் வேண்டும். அதை வளர்க்க முயலும் சிறு ஏடு சிகரம் என்று அதன் ஆசிரியர் அறிவித்திருந்தார்.

‘மனிதாபிமான கோட்பாடுகளிலும் ஜனநாயக நெறிகளிலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் போதும் உங்கள் எழுத்து மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் போதும்.

சிகரம் இடம் கொடுக்கும்.

இந்த இடம் இடதுசாரி சக்திகள் பரந்த ஜனநாயக அமைப்பைக் கட்டுவதற்கும், ஒன்றுபடும் விஷயங்களில் ஒருமைப்பாட்டை வளர்த்துக் கொள்ளவும், எதிர் வர்க்கங்களுக்கு ஆதரவான இலக்கிய அம்சங்களை அம்பலப்படுத்துவதற்கும் கொடுக்கப்படும் இடமாகும்.

இவ்வாறு ஆசிரியர் எழுதினார்.

'இலக்கியமும் சமுதாய மாற்றங்களும்' என்ற தலைப்பில் வி. பி. சிந்தன் எழுதிய கட்டுரை முதல் இதழில் பிரசுரமாயிற்று.

'இலக்கியம் என்பது சமுதாயத்தின் விளை பொருள். சமூக உறவுகளும் உற்பத்தி முறைகளும் எந்த அளவு ஒரு சமுதாயத்தில் நிலவுகிறதோ, அந்த அளவு அந்தச் சமுதாயத்தின் இலக்கியமும் இருக்கும் .

சமுதாய மாற்றம் ஏற்படும் போதெல்லாம் இலக்கியத்திலும் மாற்றம் ஏற்படும். சமூக உணர்வின் துடிப்பைக் கிரகித்துக் கொண்டு அதை வெளிப்படுத்தும் இலக்கியங்கள் சமுதாய உணர்வின் அலைகளையும் பாதிக்கின்றன. சமுதாய மாறுதலை அவை உத்வேகப்படுத்துகின்றன'-இக்கருத்தை சிந்தன் தனது கட்டுரையில் வலியுறுத்தியிருந்தார்.

தணிகைச்செல்வன், பறம்பைச் செல்வன், க. பொ. அலி கவிதைகள்; என். ஆர். தாசன், ம. ந. ராமசாமி எழுதிய கதைகள், மு. செந்தமிழன்