பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

வல்லிக்கண்ணன்


பிரசுரித்து ஊக்கம் அளிக்க வேண்டியிருப்பதாலேயே இப்படி நேர்கிறது என்பது அவருடைய கூற்று.

‘சிகரம் லாபத்திற்காக நடத்தப்படவில்லை. கலை-இலக்கியப்-பண்பாட்டுத் துறையில் முற்போக்கு முகாமை, வர்க்கக் கண்ணோட்டத்தைப் பலப்படுத்தும் இலட்சியத்திற்காகவே நடத்தப்படுகிறது' என்பதை அவ்வப்போது நினைவுறுத்தினார் அவர்.

கே. முத்தையா எழுதிய 'சிலப்பதிகாரம்' பற்றிய ஆய்வுக் கட்டுரை போலவே முக்கியமான மற்றொரு கட்டுரைத் தொடரையும் சிகரம் வெளியிட்டுள்ளது. ஜன. சுந்தரம் எழுதிய 'அகப்பாடல்களில் அரசியல் பிரச்னைகள்-சமூக உறவுகள்' என்ற தொடர் கனமான சிந்தனைகளைக் கொண்ட ஆழ்ந்த ஆராய்ச்சியாகும்.

தனிக் கட்டுரைகளில் க. கைலாசபதியின் 'தற்கால இலக்கியத்தில் சில போக்குகள்', மற்றும் 'ஈழத்துத் தமிழ் இலக்கியம்- ஓர் அறிமுகம்', சூரியதீபன் எழுதிய 'நடுத்தரவர்க்கப் பேனா', நல்லதம்பியின் 'கலைஞனும் சமூகமும்', 'பாரதி இலக்கியம்', ஆகியவை முக்கியமானவை.

சூரியதீபன் தற்கால உண்மைகளைச் சூடாகவும் அழுத்தமாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 'நடுத்தர வர்க்கப் பேனா' என்ற கட்டுரையில்.

'மக்களிடமிருந்து மக்களுக்குக் கொடுப்பது என்பது அரசியலுக்கு மட்டுமல்லாமல், கலை இலக்கியத்திற்கும் பொருந்துகிற ஒன்று. மக்களிடமிருந்து விஷயரசம் எடுத்து இலக்கியத்தில் பூசுகிறபோதுதான், அது காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பது சரியாகிறது.

'புதுக் கவிதை எழுதுவதே ஒரு பெரிய சமூக நிகழ்வு ஆகிவிடாது. புதுக் கவிதை எழுத பேனா தொட்டுவிட்டதாலேயே சமூக முன்னோட்டத்திற்கான பணியைச் செய்து விட்டதாக ஒரு பெருமை இன்றைய மத்திய வர்க்க எழுத்தாளர்களிடையே காணப்படுகிறது. வாழ்க்கை நிலைகளில் மாற்றம் கொள்ளாமல் எழுதுவது மட்டுமே தீர்வு கண்டுவிடும் என்று எண்ணினால், அது நடுத்தர வர்க்கக் கனாக்களே.’

எழுதுகிறவர்களைச் சிந்திக்கும்படி தூண்டுகிற இந்தவிதமான எண்ணங்கள் இக்கட்டுரையில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன.

மூன்று வருடங்கள் 'சிகரம்' பெரிய அளவில் ('தீபம்' அளவில்) வெளிவந்தது.