பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

169


சோவியத் ரஷ்ய எழுத்தாளர் பாஸ்டர்நாக்கிற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டபோது, அது பலவிதமான சர்ச்சைகளைக் கிளறிவிட்டது. 'பாஸ்டர்நாக்கும் நோபல் பரிசும்' சம்பந்தமான கட்டுரை ஒன்றை ‘கார்க்கி' பிரசுரித்தது.

அதேபோல ஸோல்லெனிட்ஸின் என்ற ரஷ்யப் படைப்பாளிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோதும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் பரவலாக நிலவின. ஸோல்ஸெனிட்ஸின் பற்றியும், அவருடைய படைப்பு, பாத்திரமும் குறித்தும் 'கார்க்கி' கட்டுரைகள் வெளியிட்டது.

‘இலக்கியம் பற்றிய லெனினியக் கொள்கை', 'எங்கள் சகாப்தத்தின் மகாகவி மயாகோவ்ஸ்கி', 'இந்திய மண்ணில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள்', 'புரட்சிக் கவிஞன் பெட்டோபி' ( ஹங்கேரியக் கவிஞன் - இப்படி கனமான விஷயங்களைப் பிரசுரிப்பதில் 'கார்க்கி' ஆர்வம் கொண்டிருந்தது.

‘சுதந்திரத்திற்குப் பிந்திய தமிழ் இலக்கியம்' குறித்து 'கார்க்கி' காரசாரமாக விமர்சித்தது. 'மனிதாபிமானி என்கிற கட்டத்தைத் தாண்டி வர்க்க எழுத்தாளராய் உயரும்போது' தான் ஒரு படைப்பாளி உண்மையான இலக்கியவாதி ஆகிறான். 'ஏனென்றால், வர்க்கத் தன்மை இல்லாத சுத்தமான இலக்கியம் என்று ஏதாவது உண்டா என்ன?' என்று இளவேனில் அழுத்தமாக அறிவித்தார்.

கவி பாரதியை அவர் அங்கீகரிக்கவில்லை. பாரதி பற்றிக் கடுமையாகவும், ஆத்திரத்தோடும் அவர், கோளாறும் குறைபாடும் நிறைந்த கருத்துக்களை வலியுறுத்தியிருக்கிறார்.

'சோஷலிச இந்தியாவில் முற்போக்குக் கவிஞன் என்று கதைக்கப்படும் பாரதி' என்றும்,

‘இந்தியாவின் சகல வர்க்கங்களும் தீபாராதனை நடத்துகிற மகாமகா-மகாகவி பாரதியின் இமாலயப் படைப்புக் கூட, பாட்டாளி வர்க்கத்திற்காக இப்போதுதான் பேனா பிடிக்கிற ஒரு நர்ஸ்ரிக் கவிஞனின் நாலாந்தரக் கவிதைக்கு முன் குப்பை என்று மிகுந்த ஆரவாரத்துடன் சொல்வோம்’ என்றும் 1972-ல் இளவேனில் எழுதியிருக்கிறார்.

இது எவ்வளவு அபத்தமான கருத்து என்பதைத் தரமான கவிதை ரசிகர்கள் எவரும் உணர முடியும்.

தனது நோக்கு சரியானது என்றும் அவர் வாதாடுகிறார்.