பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

வல்லிக்கண்ணன்


‘விமர்சனமில்லாத இலக்கியம் விளக்கில்லாத தெருக்களைப் போல’ என்று ஒரு சிந்தனையை எடுத்துக் கூறிய முழக்கம் விமர்சனக் கட்டுரைகளைப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டியது.

'இலக்கிய விவகாரம் பகுதியில் க. வீரையன், தி. ஜானகிராமன் படைப்புகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கி, தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 'நவீன இலக்கியவாதிகள்— ஒரு பார்வை என்று த. தியாகராசன் எழுத்துலகில் காணப்படுகிற ஆரோக்கியமற்ற போக்கு ஒன்றைச் சட்டிக்காட்டினார்.

‘தமிழ் இலக்கியத் துறை இன்று ஒரு நோய்க்கு ஆட்பட்டிருக்கிறது. பொதுவான நோக்கில் வளர்ச்சியைக் கண்டு வரும் படைப்பு இலக்கியவாதிகளும், விமர்சகர்களும் அர்த்தமில்லாத சில மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களையே மையமாக்கிக் கொண்டு வெறும் ஆரவாரம், ஜம்பம் இவையே முதல் தரமான இலக்கியவாதியின் இயல்புகள் என்று கருதிக் குழம்பியிருக்கிறார்கள். ஒருவரையொருவர் நாகரிக விளிம்பைத் தாண்டித் தாக்கிக் கொள்வதற்கும் தங்களுக்குள்ளாகவே மிதப்போடு முழங்கிக் கொள்வதற்கும் இவர்கள் சூட்டுகிற அல்லது கருதுகிற பெயர் தான் என்ன? பெருமிதமா ? அல்லது வறட்டு ஜம்பமா என்று தெரியவில்லை. எந்த எழுத்தாளனுக்கும் அவனது சுயமிதப்பு கல்லறை கட்டி விடும். அவனது சுடர்மிகும் எழுத்துக்கள் கூட அவனது திமிர்த்தனத்தால் அஸ்தமித்துப் போய்விடும்.’

ஊன்றி உணர்தற்குரிய இத்தகைய உண்மைகளை வெளிப்படுத்தியது இந்தச் சிந்தனைக் கட்டுரை.

'புதுமைப்பித்தன் கதைகள் இன்றும் புதுமையே' என்றொரு ஆய்வை இரெ. சண்முகவடிவேல் எழுதியிருந்தார். மற்றும் கதைகள், ஓரங்க நாடகம், கவிதைகள் ஆகியவற்றையும் இரண்டாவது இதழ் கொண்டிருந்தது.

'ஒரு இலக்கிய இதழுக்கு ஏற்படக்கூடிய வாடிக்கையான சிக்கல்களை' முழக்கமும் சந்தித்துக் கொண்டிருந்ததால், இந்தக் காலாண்டு ஏடு காலம் தவறுவதையும், மிகுந்த தாமதத்தை அனுஷ்டிப்பதையும், பக்கங்களைக் குறைப்பதையும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இரண்டு இதழ்களை ஒன்றாக்கி வெளியிடுவதையும் நடைமுறையாகக் கொள்ள நேரிட்டது.

1982—ல் முழக்கம் பாரதி மலராக ஒரு இதழைத் தயாரித்து வெளியிட்டது. அது நல்ல கட்டுரைகளைக் கொண்டிருந்தது. பாரதியும்