பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

வல்லிக்கண்ணன்


பெருமிதமுறும் தகுதி வாய்ந்தவர்களிடையே நாளையே ஒரு மகாகவி தோன்றுவான்.’

செகந்நாதனின் இந்த விமர்சனம் கவிதை எழுதுவோரிடையே ஒரு விழிப்பு உணர்வைத் தோற்றுவித்தால் நல்லது.

'முழக்கம்' இந்தச் சிறப்பு இதழில் பாரதி சம்பந்தமான கட்டுரைகளோடு வேறு சில விஷயங்களும் இடம் பெற்றிருந்தன. கண்ணதாசன்—ஒரு மதிப்பீடு (ஆ. இராமச்சந்திரன் ; முதல் மூன்று தமிழ் நாவல்கள் (ஒரு மதிப்பீடு)—வல்லிக்கண்ணன், மக்கள் கவிஞர் கே. சி. எஸ். அருணாசலம் அவர்களுடன் ஓர் உரையாடல்; சில கவிதைகள் ஆகியவை இதழின் விஷயச் சிறப்புக்கு மேலும் கனம் சேர்த்துள்ளன.

1983 இதழ் ஒன்றும் விஷய கனம் பெற்றிருந்தது. 'தமிழ் நாவல்களின் உள்ளடக்கம் என்ற வல்லிக்கண்ணன் ஆய்வும், புதிய கவிதையில் மார்க்லியத் தாக்கம் பற்றிய ஆ. செகந்நாதன் ஆய்வும் இலக்கிய மாணவர்களுக்கு நல்ல விருந்து ஆகும்.

1983 டிசம்பர் எனத் தேதியிட்ட முழக்கம் இதழின் முக்கிய அம்சமாக மேத்தாவின் புதுக்கவிதைகள் பற்றிய ஆ. செகந்நாதன் ஆய்வு அமைந்துள்ளது. மேத்தாவின் கவிதைகளில் உள்ள சிறப்புகளையும் குறைபாடுகளையும் இந்த விமர்சனம் சுட்டிக்காட்டுகிறது. ஆ. தனஞ் செயன் கவிதை, இலங்கையில் ஓர் ஒத்திகை மற்றும் புத்தக மதிப்புரை, தகவல்கள் இந்த இதழின் உள்ளடக்கம் ஆகும்.

இலக்கிய விமர்சனத்தில் அதிக அக்கறை காட்டிய முழக்கம் கால தாமதத்தைத் தவிர்க்க இயலாது போயினும், தொடர்ந்து பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பினும், ஓய்ந்து நிற்காது வெளிவரும் என்று அதன் ஆசிரியர் கூறியபோதிலும், காலம் அதற்கும் முடிவு கட்டிவிட்டது.