பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

வல்லிக்கண்ணன்


மதுரையிலிருந்து வெளிவந்த 'தடம்' மாத இதழ் இத்தன்மையது. வேடசந்தூர் வட்டாரத்தின் செய்தி, கலாச்சார ஏடாகத் தடம் இயங்கியது. கிராம மக்களின் பிரச்னைகளை வெளிப்படுத்துவது; கிராமிய இலக்கியங்களை, கலையைக் கண்டெடுத்துப் பரப்புவது; மறைந்து கிடக்கும் எழுத்தாளர்களைக் கண்டெடுத்து, அறிமுகப்படுத்தி வளர்ப்பது; புதிய எழுத்தாளர்களை உருவாக்குவது—இவற்றையும் தன் நோக்கங்களாகக் கொண்டிருந்தது தடம்.

வேடசந்தூர் வட்டாரத்தில் நடைபெற்ற விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டங்கள் பற்றிய கட்டுரைகள் மற்றும் விறுவிறுப்பான கட்டுரைகள், கவிதைகள் தடம் இதழ்களில் பிரசுரம் பெற்றன. அவ்வட்டாரத்தில் வழங்கி வந்த பழம் பாடல்களை, நாட்டுப் பாடல்களை— சேகரித்து இதழ்தோறும் வெளியிட்டது.

அட்டைப் படங்களை வித்தியாசமான முறையில் தடம் அச்சிட்டு வந்தது. அது தயாரித்து அளித்த 'சுதந்திர தின மலரும்' வித்தியாசமானதாகவே இருந்தது.

“சுதந்திர தினத்தைப் பற்றிய எங்கள் அறிவின் அளவைக் கொட்டி அளப்பதைக் காட்டிலும் கிராம மக்களின் அனுபவங்களை வெளியிடுவோம் என்று அவர்களை அணுகினோம்.

அப்புறம்தான் தெரிந்தது— முதலில் அவர்கள் சுதந்திரம் என்ற ஒன்றைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதும், அந்த நிலையில் அவர்கள் இல்லை என்பதும்.

அப்படி இருக்க போலித்தனமாக சுதந்திர தின மலர் என்று தாம் தூம் என்று நாங்களே எழுதிக் குவிக்கவும் விரும்பவில்லை.

கிடைத்தவற்றை மட்டுமே பிரசுரிக்கிறோம், இது சிறப்பிதழ் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி என்று“ (தடம், ஆகஸ்ட்-1981).

கிராமவாசிகள்— பலதரப்பட்டவர்கள்— சாதாரணர்களிடம் சுதந்திரம் பற்றிக் கருத்து சேகரித்து, 'சொதந்திரம்.அப்படின்னா என்ன ?' என்று தலைப்பிட்டுப் பிரசுரித்துள்ளது 'தடம்'.

தடம் வெளியிட்டுக்குப் பொறுப்பேற்றிருந்த 'ஆசிரியர் குழுவினர்' பெயர் எதுவும் தரப்பட்டதில்லை.

மதுரையிலிருந்து வெளிவந்த மற்றுமொரு சிறு பத்திரிகை 'நிஜங்கள்'. ஆசிரியர் ஏ. மஹபூப் பாட்சா. இதுவும் தீவிர கதியிலேயே இயங்கியது.