பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வல்லிக்கண்ணன்


காலத்தில் அப்படி ஒரு கோஷ்டி (குழு) ஆக எழுத்தாளர்கள் இயங்கியதில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.

மணிக்கொடியில் எழுதியவர்கள் ஒரே விதமான இலக்கியக் கொள்கையோ, நோக்கும் போக்குமோ கொண்டிருந்தவர்கள் அல்லர், ஒரே தரத்தினரும் இல்லை. அவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை அதிகமாகவே இருந்தது. அதை வேகத்தோடு வெளியிடவும் அவர்கள் தயங்கியதில்லை. ஆனால், அவர்கள் உலக இலக்கியத்தின் சிறுகதை வளத்தை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தவர்கள். அதே தரத்தில் தமிழிலும் சிறுகதைகள் வரவேண்டும் என்ற தீவிர வேட்கை கொண்டவர்கள். ஆர்வமும் எழுத்து அனுபவமும் இலக்கிய ருசியும் உடையவர்கள். தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணத்திலும் அதற்காக உற்சாகமாக உழைப்பதிலும் அவர்கள் ஒத்த மனம் உடையவர்களாக இருந்தார்கள்.

'மணிக்கொடி’க்கு பி. எஸ். ராமையா ஆசிரியர். கி. ரா. (கி. ராமச்சந்திரன்) துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். புதுமைப்பித்தன் ராமையாவின் மணிக்கொடிக்கு அதிக ஒத்துழைப்புத் தந்துள்ளார். புத்தக மதிப்புரைகள் எழுதினார். இலக்கிய விவாதங்களைக் கிளப்பினார்.

இலக்கியப் பிரச்னைகள் சம்பந்தப்பட்ட கருத்துப் பரிமாறலுக்கு 'யாத்ரா மார்க்கம்' என்ற பகுதி பெரிதும் உதவியது.

நேரடி மொழிபெயர்ப்பு நல்லதா, தழுவி எழுதுவது சரியா?- என்ற விவகாரம் இப்பகுதியில் சுவாரஸ்யமான விவாதமாக நடந்தது குறிப்பிடத்தகுந்தது. புதுமைப்பித்தன், கி. ரா., கு. ப. ராஜகோபாலன், ந. சிதம்பர சுப்பிரமணியன், க. நா. சுப்ரமண்யம் ஆகியோர் இந்தச் சர்ச்சைக்குச் சூடும் சுவையும் அளித்தனர் ( இந்த விலாதக் கட்டுரைகளை, மதுரையிலிருந்து வெளிவந்த 'வைகை' என்ற சிறுபத்திரிகை 1980-ம் வருடம் அதன் 27, 28 -ம் இதழ்களில் மறுபிரசுரம் செய்துள்ளது).