பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

வல்லிக்கண்ணன்


தரப்பட்டுள்ளது. மஞ்சுவின் முகப்போவியங்களுக்கு ரசனை நிறைந்த விளக்கவுரைகளை எழுதியிருப்பவர் ‘இலக்கியன்‘ (ப்ரகாஷ்) தான்.

மஞ்சு இதுவரை ஐந்து இதழ்களை வெளியிட்டிருக்கிறது.

மதுரையிலிருந்து வருவது ‘புதிய பார்வை‘. 1982 செப்டம்பரில் தொடங்கப் பெற்ற இந்தத் திங்களிதழ் ‘அறிவன்‘ என்பவரை சிறப்பாசிரியராகவும், மற்றும் சிலரை ஆசிரியர் குழுவினராகவும் கொண்டு இயங்கியது.

‘சமுதாய, இலக்கிய, மெய்ப்பொருளியல் கண்ணோட்டத்தில்‘ புதிய பார்வை வளர்ந்தது. மெய்யறிவைப் போதிக்கும் வள்ளுவத்தையும், மெய்ப் பொருளறிஞர் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் அறிவுரைகளையும் இது எடுத்துக் கூறியது. பகவான் ரஜ்னீஷின் கொள்கைகளையும் வாசகர்களது கவனத்துக்குக் கொண்டு வந்தது.

இலக்கிய ரீதியில் மரபுக் கவிதைகளை மட்டுமே ஆதரித்து வந்த ‘புதிய பார்வை‘ புதுக் கவிதையை எதிர்க்கும் கட்டுரை ஒன்றைப் பிரசுரித்தது, ஒரு விவாதத்துக்கு இடம் அளித்தது. பிறகு ‘வளரட்டும் புதுக் கவிதை‘ என்று அறிவித்து, புதுக் கவிதைப் படைப்புகளை வரவேற்றுப் பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டு விட்டது.

‘வெண்பாப் போட்டி‘ நடத்தி, இதழ்தோறும் வெண்பாக்களை இரண்டு பக்கங்கள் பிரசுரித்தது.

‘பழமையின் சுமையினின்றும் விடுபடுவோம்—என்றும் புதிய பார்வையைப் போற்றி வாழ்வோம்‘ எனக் கொள்கை முழக்கம் செய்த ‘புதிய பார்வை‘ காலத்துக்கும் நவ சிந்தனைக்கும் ஒத்துவராத— முரண்பட்ட—கருத்துக்களைப் பிரசாரம் செய்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தது.

விலைமகளிர் விடுதிகளை நாடு முழுவதும் திறக்க வேண்டியது அவசியம் என்று ஒரு கட்டுரை மூலம் அழுத்தமாக அறிவித்தது புதிய பார்வை. இயற்கை உணவுகளை உண்டு இயற்கை வாழ்வு வாழ வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியது. தனித்தமிழுக்கு ஆதரவு காட்டவும் முற்பட்டது.

‘மெய்யறிவைத் தேடிப் பார்க்கும் புதிய பார்வை’ வாழும் வழியாகக் கடைப்பிடிக்க விரும்புவது—

‘மறைந்த காலத்தை மறப்போம். வருங்கால நினைவு நமக்கு வேண்டாம். நிகழ்கின்ற காலத்திலே நிறைவைக் காண்போம்‘ என்பதாம்.