பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

237


படிகள் ஆழ்ந்த நோக்கின் ஆதாரத்தோடும், சிந்தனை கனத்தோடும் கேள்விகள் கேட்டுள்ளது. சுஜாதா ( ஸ்ரீரங்கம் எஸ். ரங்கராஜன் ) மனம் திறந்து பதில்கள் சொல்லியிருக்கிறார். ஆனாலும், மேம்போக்காகவும், நமக்கு ஏன் வீண் விவகாரம் என்ற எண்ணத்தில் பல கேள்விகளுக்கு, ஆம், இது மிக அருமையான ஆப்ஸர்வேஷன் என்று ஒத்துப்பாடியும், பாராட்டியும் நழுவியிருக்கிறார் என்பதை அவருடைய பல பதில்கள் புலப்படுத்துகின்றன.

பெரும் பத்திரிகை வாசகர்கள் குறித்து சுஜாதா சொல்லியிருப்பது ரசமான விஷயம் :

‘ஒரு பெரும் பத்திரிகை வாசகன் எப்படி இருப்பான் என்று யாராவது ஆராய்ச்சி டாக்டரேட் கூட வாங்கலாம். நான் இது வரை நிறைய வாசகர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களிடம் பொதுவாகவே ஒரு Philistinism இருக்கிறது. சினிமா பார்ப்பது, கிரிக்கெட் காமெண்ட்ரி கேட்பது, பிக்னிக் போவது, சனிக்கிழமை டி. வி. பார்ப்பது, ஆர்கெஸ்ட்ரா, சங்கீதம் போன்ற வெறும் பொழுதுபோக்கு சமாசாரங்களுடன் கதை படிப்பதும் அவர்களுக்கு ஒரே ரகம். எனக்கு வரும் கடிதங்கள் பெரும்பாலும் மேம்போக்காக என் கதைகளைத் திகட்டத் திகட்டப் புகழ்ந்து விட்டு, ஒரு கையெழுத்திட்ட போட்டோ கேட்கும் கடிதங்கள். இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்ததில் தெரிந்தது— நிச்சயம் இலக்கிய பிரக்ஞை இல்லை. Association with the famous. அவ்வளவுதான். இதே கடிதத்தை அவன் ரஜினிகாந்துக்கும் எழுதுவான், கவாஸ்கருக்கும் எழுதுவான். எனவே பெரும் பத்திரிகையின் லட்சக்கணக்கான வாசகர்களில் தொண்ணுறு சதவிகிதத்திற்கு மேல் மேம்போக்கான வாசகர்கள், இலக்கியப் பிரக்ஞை இல்லாதவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி சர்க்கரை தடவித்தான் தரவேண்டியிருக்கிறது. நீங்கள் கேட்கலாம், ஏன் பெரிய பெரிய பத்திரிகைகளில் எழுதாமலே இருந்து விடலாமே என்று. அது defeatism என் குறிக்கோள், அந்த பத்து சதவிகிதத்தை அதிகமாக்குவது. அதற்காக இந்தக் கத்தி நடப்பு செய்ய வேண்டியிருக்கிறது’ (சுஜாதா).

படிகள் இதர சிறு பத்திரிகைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையிலேயே செயலாற்றியது. தனது நோக்கை அடிக்கடி எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் படிகளுக்கு இருந்தது.

’படிகளின் குறிக்கோள் வெறும் கலை சார்ந்த களன் அல்ல.