பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45. இன்னும் சில பத்திரிகைகள்


புது விடியல்

‘இன்று வரும் மாறுதல்களை நாம் மறக்கமுடியாது. ஆனாலும் சமுதாய சீர்திருத்த வழிகளில் வரும் சிக்கல்களைத் தகர்ப்பது அவசியமே....

புது விடியல்—இது எந்த அரசியல் உலாவிலும் சேராது. ஆனால், தனியாகவே வாசகர்களை உள்ளடக்கிச் செல்லும். இது எந்த முலாம் பூச்சுகளிலும் முகம் புதைத்துக் கொள்ளாது. ஒரு தெளிந்த சிந்தனையை, செம்மையான பாதையை இதனுள் காணலாம்.

காகிதக் கவர்ச்சியில் ஈடுபட்டவர்கள் இந்தப் பத்திரிகையைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. இவர்களுக்கு வேண்டுமானால் உளுத்துப்போன சிந்தனைகள் வெளியே பற்றாக்குறையின்றிக் கிடைக்கும்.

சிலர் தடுமாறுகிறபோதும், தடம் மாறுகிறபோதும், தாக்கி விட்டுச் செல்லும்போதும், பெருஞ்சோதனைகளை இது சாதனையாகவே மாற்றிப் படைக்கும். ‘

முதல் இதழில் இவ் ‘வெளிச்ச வரிகள்‘ அறிவிப்போடு கும்பகோணம், புது டபீர் தெரு, பழ. ராதாக்கண்ணன் ‘புது விடியல்‘ என்ற இதழை 1984 செப்டம்பர் முதல் பிரசுரித்தார். சமூக நோக்குடன் பல பிரச்னைகளையும் ஆராயும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறந்த படைப்பாளியும், ‘பசித்த மானுடம்‘ என்ற அருமையான நாவலின் ஆசிரியருமான கரிச்சான் குஞ்சு (ஆர்.நாராயணசுவாமி ) ‘அவன் கதை‘ என்ற ரசமான தொடர் கதை ஒன்றை இதில் எழுதினார்.

மஞ்சள் பத்திரிகைத்தனமான எழுத்துக்களை வளர்க்கும் வணிகப் பத்திரிகைகளையும், பணத்துக்காகப் பெரிய பத்திரிகைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உற்சாகமாக ஈடுபடும் எழுத்து உற்பத்தியாளர்களையும் புதிய விடியல் காரசாரமாகக் கண்டனம் செய்து வந்தது.