பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

வல்லிக்கண்ணன்


புது விழிகள்

இதுவும் கும்பகோணத்திலிருந்துதான் வெளிவந்தது. ஆசிரியர் இராம. உமாசந்திரன். இம்மாத இதழ் சமூகப் பிரச்னைகளைச் சூடாக ஆராய்ந்தது. கவிதைகள், கதைகளோடு புத்தக விமர்சனத்திலும் இது அக்கறை காட்டியது. படைப்பாளிகளைப் பேட்டி காண்பதோடு, சமூகத்தின் அடிமட்டத்தில் வசிக்கிற உழைப்பாளி மக்களையும் (உதாரணமாக, கூலி விவசாயத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்றவர்களை பேட்டி கண்டு, அவர்களுடைய பிரச்னைகளையும் குறைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.

கரிச்சான் குஞ்சு இதில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி கட்டுரைகள் எழுதினார்.

நீலமலை பனி மலர்

இது 1979-1980-ல் நடைபெற்ற தரமான சிறு பத்திரிகை. கனமான விஷயங்களைப் பிரசுரித்து வந்தது. இலக்கியத்துடன் நவீன ஓவியம், சினிமா, சமூகப் பிரச்னைகளிலும் அக்கறை கொண்டிருந்தது. சார்த் ஆல்பெர் காம்யு பற்றிய ஆய்வுகளை வெளியிட்டது. அபத்த நாடகங்களில் ஆர்வம் காட்டியது. தி. ஜானகிராமன், வெங்கட் சாமிநாதன் பேட்டி கண்டு பிரசுரித்திருந்த உரையாடல் குறிப்பிடத்தகுந்தது. தமிழவன், நிவேதிதா, கௌதமன், மணிக்கண்ணன், நாகூர் ரூமி முதலியோர் இதில் எழுதியிருக்கிறார்கள்.

சிறு சூழலும் சரி, அதற்கப்பாலும் சரி. மார்க்ஸியத்தின் வசீகரம் பரவலாக உணரப்படுவதும், அதன் தாக்கத்திற்கு இத்தலைமுறையினரின் பெரும்பான்மையான அறிவுஜீவிகள் உட்படுவதும் காணமுடிகிறது. இந்த உண்மையினைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில் நாங்கள் தயக்கம் கொள்வதுடன், இப்போக்கினை ஓர் ஆழமான ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்தவும் விழைகிறோம். வெறும் அறிவைப் பூசித்து மனித விமோசனத்திற்கான எழுச்சிகளில், போராட்டங்களில் சிரத்தையற்ற லபுடான்கள் எத்துணை மார்க்ஸியம் பேசினாலும் அவர்களில் நம்பிக்கை கொள்ள பனி மலர் தயாராயில்லை. நல்ல விஷயமாயிருப்பினும் கூட அவைகளைத் தெரிந்து கொள்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒன்றைத் தெரிந்து கொண்டதனால் மட்டும் அதனை அறிந்து கொண்டவனாய் ஒருவன் மாறிவிட முடியாது. இது பனிமலர் அறிவித்த கருத்துரையாகும்.