பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வல்லிக்கண்ணன்


1936 முதல் இத் தயாரிப்பு 'தினமணி ஆண்டு மலர்’ என்ற பெயரை ஏற்றது. இம் மலர்களைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனுக்குக் கிட்டியது. இம் மலர்கள் அருமையான இலக்கிய மலர்களாக விளங்கின. மலரின் உருவமும் கச்சிதமான வடிவத்தைப் பெற்றது. இப்படி நான்கு அல்லது ஐந்து மலர்களே வெளிவந்தன.

‘ஹனுமான்' வாரப் பத்திரிகை 1939, 1940-ம் வருடங்களில் மலர் தயாரித்து வெளியிட்டது. இம்மலர்களை உருவாக்கும் பொறுப்பை பி. எஸ். ராமையா ஏற்றிருந்தார். மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் இம் மலர்களில் எழுதினார்கள்.

‘ஸீரியஸ் லிட்டரேச்சர்' முயற்சிகளில் ஆர்வம் காட்டி வந்த முதல் தலைமுறை எழுத்தாளர்களும்-அவர்களை மணிக்கொடி எழுத்தாளர்கள் என்றே குறிப்பிடலாம்- தங்கள் படைப்புகளை வெளியிடுவதற்குத் தகுந்த பத்திரிகைகள் இல்லாத ஒரு அசவுகரியத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைதான் தமிழ்நாட்டில் நிலவியது.

ஆழமான, தீவிரமான போக்கும் நோக்கும் கொண்டிருந்த இலக்கியக் கொள்கையை 'மணிக்கொடி மனோபாவம்’ என்றும், அதற்கு நேரிடையான பாணியை- மேலோட்டமான, ஆழமில்லாத, சர்வஜனரஞ்சக எழுத்து ரீதியை 'விகட மனோபாவம்' என்றும் குறிப்பிட்ட கு. ப. ராஜ கோபாலன், இவ் இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலைப் போக்கை, ‘மிதவாதப் போக்கு' என்றும் கலைமகள் மனோபாவம் என்றும் கணித்தார். .

1930-40 களில் 'கலைமகள்' மணிக்கொடிப் படைப்பாளிகளையும் ஆதரித்தது; விகட மனோபாவ எழுத்துக்களையும் வரவேற்றுப் பிரசுரித்தது. அக்கால கட்டத்தில் தரமான இலக்கியப் பத்திரிகையாக அது விளங்கியது. மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் அம் மேடையை நன்கு பயன் படுத்திக் கொண்டார்கள்.

என்றாலும், மறுமலர்ச்சி இலக்கிய வேகம் கொண்ட இளைய தலைமுறையினரும் நாட்டில் தோன்றி வந்தார்கள். அவர்களுக்கு மணிக்கொடி ரீதியில் மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகை ஒன்றுகூட தமிழில் இல்லையே என்ற குறை பெரும் மனப்பாரமாக இருந்தது. இவ்வித உணர்வுடைய இளைய எழுத்தாளர்கள் நாடு நெடுகிலும் சிதறி இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

1940 களில் மறுமலர்ச்சி இலக்கிய வேகத்தின் அலை சென்னையில் ஒடுங்கி, திருச்சி மாவட்டத்தில் புதிய எழுச்சியுடன் தலைதூக்கியது. இவ் வேகத்தின் முதல் எழுச்சி தான், 'கலா மோகினி' என்ற மாதம் இரு முறை வெளியீடு ஆகும்.