49. வேறு சில பத்திரிகைகள்
தென்புலம்
’இலட்சங்கள் இலட்சாதிபதிகளை உருவாக்குகின்றன. இலட்சியங்கள் இலட்சியவாதிகளை உருவாக்குகின்றன. என்ற வரிகளை லட்சிய மொழியாக முகப்பில் அச்சிட்டு, அதனடியில் சி. என். அண்ணாதுரையும் ஈ. வே. ரா. பெரியாரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் சித்திரத்தை அச்சிட்டு, இதர பத்திரிகைகளிலிருந்து மாறுபட்ட விஷயங்களைத் தாங்கி ’தென்புலம்’ என்ற திங்களிதழ் வெளிவருகிறது.
தோப்பூர் திருவேங்கடம் எம். ஏ. ஆசிரியராக இருந்து நடத்துகிற இம் மாத ஏடு பன்னிரண்டு ஆண்டுகளாக வந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
வரலாற்றுத் தொடர்பான தகவல் கட்டுரைகள் (இஸ்காராவும் லெனினும், இட்லர் ஏன் சர்வாதிகாரியானான், கரிபால்டியும் கிழவியும் போன்றவை ); கல்வித் துறை சம்பந்தமான கட்டுரைகள், திரு. வி. க. போன்றோரின் கருத்துரைகளின் மறுபிரகரம் சிறுகதை மற்றும் ரசமான தகவல்களைத் தென்புலம் வெளியிடுகிறது.
மரபுக் கவிதை, புத்தக மதிப்புரை ஆகியவை அபூர்வமாக (எப்போதாவது ) இடம் பெறுகின்றன.
அம்பலவாணக் கவிராயர் எழுதும் ’உண்ணாமுலையும் மங்களம் மாமியும் உரையாடுகிறார்கள்’ என்ற பகுதி இத்திங்களிதழின் சிறப்பு அம்சமாக விளங்குகிறது. படித்த, நாகரிகமான, அனுபவஞானம் பெற்ற மங்களம் மாமியும் நாட்டுப்புறத்திலிருந்து நகரத்துக்கு வந்துள்ள உண்ணாமுலையும் நாட்டு நடப்புகள், செய்திகள் பற்றி உரையாடுவது போல் எழுதப்படுகிற இக்கற்பனை நிகழ்ச்சியில் சகலவிதமான விஷயங்களும் அலசப்படுகின்றன.
சூத்ரதாரி
திருப்பூரில் தோன்றியுள்ள புதிய பத்திரிகை சூத்ரதாரி. இதன் முதல் இதழ் எடுப்பாக, நம்பிக்கை தருவதாக உள்ளது. கவிதைகள் நிறைய.